Pages

Ads 468x60px

Tuesday, November 19, 2013

புராதான சிறப்பு மிக்க மண்கண்டேஸ்வரர் சிவாலயம்

மண்கண்டேஸ்வரர்  ஆலயம் 

இக்கோவில் பொள்ளாச்சியில் இருந்து கோட்டூர் செல்லும் வழியில்  ரமணமுதலிபுதூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் வரலாற்றை பற்றி அங்கு உள்ளவர்களிடம் விசாரித்தபொழுது 
அவர்கள் கூறியது.

இக்கோவில் பல்லாயிரம்  ஆண்டுகள்  பழமையானது. அரசர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலானது சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அவ்விடத்தில் 1850 வருடங்கள் கடந்த ஓர் வாகை மரம் உள்ளது. சிதிலமடைந்திருந்த அவ்விடத்தை தவத்திரு. சிவநேச அடிகளார் அவர்களின் சீரிய முயற்சியால் புராதான சிறப்பு  மிக்க   மண்கண்டேஸ்வரர் சிவாலயம் புணரமைக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் சிவ ஆலைய வழிபாடு மற்றும் வரும் அனைத்து மக்களுக்கும் அன்னதானம் வழங்கி தொண்டாற்றி கொண்டிருக்கிறார் என்று கூறினர்.

சிவநேச அடிகளார் பற்றி கேட்டபொழுது அவர் திருவண்ணாமலையில் பல ஆண்டுகள் ஆன்மீக பயிற்சிகள் செய்து கொண்டு இருந்ததாகவும் அம்பாள் அவர் கனவில்  தோன்றி இந்த கோவிலின் இடத்தை சூட்சுமமாக காட்டியதாகவும் கூறினர்.

for more http://mankandeswar.wordpress.com/

செல்லும் வழியில் 


செல்லும் வழியில்


இந்த வாய்க்காலின் ஓரமாக சுமார் மூன்று கிலோமீட்டர் பயணிக்க வேண்டும் 


செல்லும் வழியின்  ஓரம் உள்ள வாய்க்காலில் ....


 அந்த வாய்காலோட பக்கத்துல இருக்கற மண் ரோட்டுலதான் கோவிலுக்கு போகணும். (அதுல பாதி வழி வரைக்கும் பாம்பு தண்ணில வந்துச்சு). இந்த இயற்கையான சூழ்நிலையும், பாம்பு தன்னோட இயல்பான சுதந்திரத்தோட மனிதர்களோட தொல்லையில்லாம அழகா நீந்திட்டு போறதும், சிவன் கோவிலுக்கு போகும்போது சிவனோட நெருங்கின தொடர்புள்ளதை பார்க்கறதும் மகிழ்ச்சியான விஷயங்கள் தானே...


செல்லும் வழியில்


கோவிலின் வழியை காட்டும்  வழிகாட்டி 


செல்லும் வழியில்


கோவிலின் முன்புறம் ( 1850 வருடங்களான மரம்)


சிவலிங்கத்தை புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை 













I would like to Invite you to view Some Clicks of my Coolpix here 

Thursday, October 31, 2013

தீப ஒளி திருநாள்


அனைவருக்கும் 

என் இனிய தீப ஒளி திருநாள் 

வாழ்த்துக்கள்...!!!



Tuesday, August 27, 2013

பயனுள்ள நூல்கள் - பகுதி 2

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்

இன்றைய காலகட்டத்தில் வெளியாகும் நூல்களில், படிப்பதன் மூலம் படிப்பவரின் விழிப்புணர்வை மேம்படுத்தும் என்று நான் கருதும்படியான, படித்த, உணர்ந்த சில நூல்களை "பயனுள்ள நூல்கள்" என்ற தலைப்பில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

இந்த நூல் ஆன்மிகம் மற்றும் அபூர்வ சக்திகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும்.

நூலின் பெயர்   -     பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
நூலின் விலை  -     ரூ.100/-
நூலின் ஆசிரியர்    -  என்.கணேசன்
நூல் வாங்க தொடர்பு கொள்ள    -   9600123146
ஆசிரியரின் இணையதளம்  -   http://enganeshan.blogspot.in/
நூலின் Facebook Page
Facebook Fan group Page   -    https://www.facebook.com/groups/nganeshanfans/
Publisher   -    http://blackholemedia.in/



-------------------------------------------------------------------------------------------------------------------------
நூலைப்பற்றி நூலாசிரியர் என்.கணேசன் : 

எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம். மிகப் பழைமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மிகத் தேடல்களிலும் பண்டைக் காலம் முதலே சிறந்து விளங்கியது. இன்றும் எகிப்தின் ஸ்பிங்க்ஸ்”ம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மிக ரகசியங்களைத் தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கின்றன. பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்தச் செல்வங்களைச் சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால் கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மிக ரகசியங்கள் பிரமிடுகளில் இன்னும் ஏராளமாக உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து. 
இந்நூலில் வரும் சம்பவங்களும், அனுபவங்களும் எழுத்தாளர் பால் ப்ரண்டனுடையதே என்றாலும், இது மொழி பெயர்ப்பு நூல் அல்ல. அவரது பயண அனுபவங்களில் சுவாரசியமானவற்றையும், தேவையானவற்றையும் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளேன். அதே போல சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர் விளக்காமல் விட்ட சிலவற்றைத் 
தேவை கருதி நான் விளக்கியும் விவரித்தும் இருக்கிறேன்.
                                                                                                                                                      
நூல் குறித்து தினத்தந்தி (31.10.2012) செய்தித்தாளில் வந்த விமர்சனம்:

எகிப்தில் உள்ள பிரமிடுகள், கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எகிப்து மன்னர்கள், அரசிகள் ஆகியோரின் சடலங்களை பாதுகாக்க இந்த பிரமிடுகள் கட்டப்பட்டன. சடலங்களுடன் உள்ளே வைக்கப்பட்ட தங்கம், வைரம், வைடூரியம் முதலிய விலை உயர்ந்த பொருட்களுடன் பிற்காலத்தில் கொள்ளையடிக்கப்பட்டன.மாலை நேரத்துக்குப்பின் பிரமிடுக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பால்பிரண்டன் என்ற இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி, இரவு நேரத்தில் பிரமிடுக்குள் தங்கினார். அங்கு கெட்ட ஆவிகளும், நல்ல ஆவிகளும் அலைந்து திரிவதை உணர்ந்தார். மேலும் பல அதிசய அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டன. இதுபற்றி என்.கணேசன் எழுதிய இந்த நூல், நமக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது. படிக்க வேண்டிய புத்தகம்.
                                                                                                                                                      

நூலைப் பெற விரும்புவோர் admin@blackholemedia.in , blackholemedia@gmail.com மின்னஞ்சல்கள் மூலமாகவோ, செல்பேசி: 9600123146, மூலமாகவோ பதிப்பகத்தாரைத் தொடர்பு கொள்ளலாம். 
                                                                                                                                                          

Saturday, August 24, 2013

பயனுள்ள நூல்கள் - பகுதி 1

ஆழ்மனதின் அற்புத சக்திகள்

இன்றைய காலகட்டத்தில் வெளியாகும் நூல்களில், படிப்பதன் மூலம் படிப்பவரின் விழிப்புணர்வை மேம்படுத்தும் என்று நான் கருதும்படியான, படித்த, உணர்ந்த சில நூல்களை "பயனுள்ள நூல்கள்" என்ற தலைப்பில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

உங்களுக்குள் இருக்கும், நீங்கள் முழுமையாக அறிந்திராத,மாபெரும் ஆழ்மனசக்தியை அறிந்திட...

நூலின் பெயர்   -     ஆழ்மனதின் அற்புத சக்திகள்
நூலின் விலை  -     ரூ.200/-
நூலின் ஆசிரியர்    -  என்.கணேசன்
நூல் வாங்க தொடர்பு கொள்ள    -   9600123146
ஆசிரியரின் இணையதளம்  -   http://enganeshan.blogspot.in/
நூலின் Facebook Page
 and Sample Chapters      -     https://www.facebook.com/AalmanathinArputhasakthikal
Facebook Fan group Page   -    https://www.facebook.com/groups/nganeshanfans/
Publisher   -    http://blackholemedia.in/

                                                                                                                                                        

நூலைப்பற்றி நூலாசிரியர் திரு.என்.கணேசன் அவர்கள் தனது BLOG ல்..... 

அன்பார்ந்த வாசகர்களுக்கு,
வணக்கம்.
ஆழ்மனதின் அற்புத சக்திகள் தொடர் எழுதப்பட்ட காலத்திலும் சரி எழுதி முடித்து இரண்டாண்டுகள் முடிந்து விட்ட இக்காலத்திலும் சரி வாசகர்களிடம் பெற்ற வரவேற்பு மகத்தானது.

இந்தத் தொடரின் பிற்பகுதி அத்தியாயங்களை நான் ஆழ்மன நிலைக்குச் சென்றே எழுதி இருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். அந்த நிலை அமையும் வரை எழுதாமல் அது வரும் வரை காத்திருந்திருக்கிறேன். அதற்காக நிறைய உழைத்திருக்கிறேன். முடிக்கையில் ஒரு ஆத்ம       திருப்தியை உணர்ந்திருக்கிறேன்.

எழுதி முடித்து இரண்டாண்டுகள் கழிந்த பின்னும் பல வாசகர்கள் இதை அச்சு நூலாக வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து என்னை வற்புறுத்தி வந்தார்கள். இணையப் பக்கங்களில் படிப்பதை விட ஒரு நூலாகப் படிக்கவும், தங்கள் இருப்பில் வைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பினார்கள். இந்தத் தொடர் ஒரு நூலாக வெளியிடப்பட வேண்டும் என்று விதி இருந்தால், அதற்கு உண்மையான தகுதி இது பெற்றிருந்தால், கண்டிப்பாக ஒரு நல்ல பதிப்பாளர் மூலம் நல்ல முறையில் வெளியிடப்படும் என்று விட்டிருந்தேன்.

எண்ணற்ற வாசகர்களின் எண்ணங்களின் வலிமையால் ”ஆழ்மனதின் அற்புத சக்திகள்” நல்ல தரத்தில் ஒரு அச்சு நூலாக இப்போது வெளியாகி உள்ளது. அந்த அன்பு வாசகர்களுக்கும், மனமுவந்து தானாகவே வெளியிட முன் வந்த ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பாளர் யாணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஆழ்மன சக்தி தொடரில் முடிவில் சொல்லி இருந்தேன்-

”உலகில் எதுவுமே தற்செயல் இல்லை. இது போன்ற ஒரு தொடரைப் படிக்க நேர்வதும் கூட அப்படியே. இதைப் படிக்கையில் உங்கள் இதய ஆழத்தில் இதில் லயிப்பு தோன்றுமானால், படிக்கும் போது இருக்கும் ஆர்வம் சில காலம் கழித்தும் நீங்காமல் இருக்குமானால் இது உங்களுக்காகவே எழுதப்பட்டது என்பதை உணருங்கள்.”

இப்போதும் அதையே சொல்கிறேன். இந்த நூல் ஆழ்மன சக்தி, அதீத சக்திகள் குறித்து உண்மையான ஆர்வம் உள்ளவர்களுக்காகவே எழுதப்பட்டது. அவர்களுக்கு அத்துறையில் ஆர்வத்தை அதிகரிக்கவும், அந்தப் பாதையில் பயணிக்கவும், அனுபவங்கள் பெறவும் இது தொடர்ந்து வழி காட்டக்கூடிய நூல். இந்த நூல் ஒரு முறை படித்து முடித்து வைத்து விடக்கூடிய நூல் அல்ல. திரும்பத் திரும்பப் படிக்கவும், சிந்திக்கவும் தகுந்த நூல். எனவே ஆழ்மனசக்திகள் குறித்து ஆர்வமுள்ள, அந்தத் தேடல் உள்ள, அனைவரும் இந்த நூலை வாங்கிப் பயனடையும் படியும், இந்த நூலுக்கும் உங்கள் நல்லாதரவை அளிக்கும்படியும், வாசகர்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

அன்புடன்
உங்கள்
என்.கணேசன்
                                                                                                                                                        

நூல் குறித்து தினமலர் (திருச்சி 30.01.2013) செய்தித்தாளில் வந்த விமர்சனம்:

ஆழ்மனதின் அற்புத சக்திகள் பற்றி நமது பாரம்பரியப் பொக்கிஷமான பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் மற்றும் எகிப்து, திபெத்தின் பழங்கால நூல்களில் விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஆறிவியலுக்கு சவால் விடும் இந்த அற்புத சக்திகள் பற்றி அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி என பல நாடுகளிலும் உள்ள ஆய்வு மையங்களிலும் வெளிப்படையாகவும் ரகசியமாகவும் பல சோதனைகள் நடந்து வருகின்றன. இவை பற்றிய விரிவான தகவல்களை நூற்றுக்கணக்கான ஆதாரங்களுடன் அறிமுகப்படுத்தி சிலிர்ப்பூட்டுகிறது இந்த நூல்.
ஆகாய ஆவணங்களில் இருந்து தகவல்களைப் பெற்றவர், விபத்துகளை முன்கூட்டியே அறிவித்தவர், ஆழ்மன சக்தியால் நோய்களைத் தீர்த்தவர், இறந்தவர்களைன் குரலில் பேசியவர், மறுபிறவி தகவல்கள், ஆவிகளைத் தொடர்பு கொண்டவர்கள், செத்துப் பிழைத்தவர்களின் அதிசய அனுபவங்கள், எண்ணங்களின் அற்புதப் புகைப்படங்கள் போன்ற தகவல்களை விறுவிறுப்பான நடையில் எழுதியிருக்கிறார் என்.கணேசன்.
வியப்பூட்டும் தகவல் தொகுப்பாக நூலை நிறுத்திவிடாமல், ஆழ்மன சக்தியை அடைய உதவும் மந்திர தியானம், சுக்ரா தியானம், விபாசனா தியானம், திபெத்திய தியானம் போன்ற தியானப் பயிற்சி முறைகளையும் இணைத்திருப்பது பாராட்டுக்குறியது.இந்த நூலை படிப்பவர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

துக்ளக்கில் ’ஆழ்மனதின் அற்புத சக்திகள்’ விமர்சனம் (26/6/2013)

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மகத்தான ஆழ்மனசக்தி உண்டு. முறையான பயிற்சிகளின் மூலம் அத்தகைய சக்தி கைவரப்பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தியவர்களைச் சித்தர்கள், மகான்கள் என்று அழைக்கிறோம். வெளிநாடுகளிலும் இத்தகையவர்கள் உண்டு.

இவர்கள் புரியும் அற்புதங்கள் சில சமயம் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றாது. ஆனால் அவை உண்மை. அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அந்த வகையைச் சார்ந்ததுதான் இந்த அற்புதங்கள். ஆழ்மன சக்தியில் ஓரளவு பரிச்சயம் பெற்றுள்ள இந்நூலாசிரியர், இது குறித்த பல்வேறு தகவல்களை இந்நூலில் தொகுத்துள்ளார்.

1960களில் அமெரிக்காவில் வாழ்ந்த ஜோசப் டிலூயிஸ் என்பவர், அங்கு நடந்த பல விபத்துக்களை முன்கூட்டியே அறிவித்த நிகழ்ச்சிகள். அற்புதங்களை நம்பாத ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினையே வியக்க வைத்த வாசிலிவ் என்பவரின் ஆழ்மன சக்திகள்.
ஆவியுலகத் தகவல்கள், மறுபிறவிநினைவுகள், ஆழ்மன சக்திகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், ஆல்ஃபா அலைகள், யோகா, தியானம் பற்றிய குறிப்புகளும் பயிற்சிகளும், நோய் தீர்க்கும் ஆழ்மன சக்திகள்.

உடலை விட்டு ஆத்மா எப்படி வெளியேறுகிறது, மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பன போன்ற ஆய்வுகள், பிரபஞ்ச சக்திகளுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்பது போன்ற பல விஷயங்களை 60 கட்டுரைகளின் மூலம் ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் திகிலும் திகைப்புமாக இருக்கிறது.
============================================================================
இந்த நூலை படிப்பவர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

Friday, July 26, 2013

அமானுஷ்யன் - மறுபதிவு

அமானுஷ்யன் - நாவல் 

நான் படித்ததில் பிடித்தது,
பிறரும் படிக்க வேண்டும் என விரும்புவது, 
ஒரு நாவலின் மூலம் படிபவரின் விழிப்புணர்வை அதிகரிக்க செய்யமுடியுமா என்றும், எழுத்தாளரின் கற்பனையில் உள்ள விழிப்புணர்வையும் நினைத்து  வியந்தது.
மிகவும் அற்புதமான, விறுவிறுப்பு நிறைந்த, வார்த்தைகளால் விவரிக்க முடியாத, அனைவரும் படிக்க வேண்டிய நாவல். முதல் பக்கம் முதல் முடிவுறும் பக்கம் வரை உங்களை முழுமையாக ஆட்கொள்வான் இந்த அமானுஷ்யன்.

கீழே உள்ள link மூலம் அமானுஷ்யன்(1), அமானுஷ்யன்(2) ....என்று select செய்து முழு இந்த நாவலையும் படிக்கலாம். 

படைப்பிற்கு நன்றி திரு. N.கணேசன் அவர்களே. 

திரு. N.கணேசன் அவர்களின் அடுத்த நாவல் 
எழுதும்பொழுது விழிப்புணர்வை வார்த்தைகளாய் வெளிப்படுத்தி 
அதை படிக்கும் பொழுது வார்த்தைகளை விழிப்புணர்வாய் பதியவைக்கும் 
அமானுஷ்ய எழுத்தாளரின் அடுத்த படைப்பு  "பரம(ன்) ரகசியம்" 

Thursday, July 18, 2013

ஸ்ரீ ராகவ மந்திராலயம் - ஆத்துப்பொள்ளாச்சி

ஸ்ரீ ராகவ மந்திராலயம்

பொள்ளாச்சியில் இருந்து சுமார் 15km தொலைவில் அம்பராம்பளையம் அருகில் ஆத்துபொள்ளாச்சி  என்ற ஊரில் உள்ள G.M.தோட்டம் என்ற இடத்தில்  தாத்தா சாமிகள் ஜீவசமாதியும், ராகவா சாமிகள் ஜீவசமாதியும் இயற்கை சூழ அமைந்துள்ளது.
(மேலும் விவரங்கள் பின்னர் இணைக்கப்படும்)

தாத்தா சாமிகள் ஜீவசமாதி 
ராகவா சாமிகள் ஜீவசமாதி
செல்லும் வழியில்...
செல்லும் வழியில்...

இரு ஜீவசமாதிகள் அமைந்துள்ள இடம் 

செல்லும் வழியில்...



செல்லும் வழியில்...

செல்லும் வழியில்...

Friday, June 28, 2013

உடலை விட்டு வெளியேறும் ஆத்மா

படித்ததை உங்களுடன் - 7

( திரு.என் .கணேசன் எழுதிய ஆழ்மனதின் அற்புத சக்திகள்  என்ற புத்தகத்தில் இருந்து. )

மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன. முதலில் 1960 களில் டாக்டர் சார்லஸ் டார்ட் (Dr. Chares Tart) என்பவர் இது குறித்து நம்பத்தகுந்த ஆராய்ச்சிகள் செய்து சிலருக்கு அந்த சக்தி உள்ளது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். 


இது போன்ற சக்திகள் இன்றைக்கு நம்மைத் திகைக்க வைத்தாலும் பல பழம் கலாச்சாரங்களில் இவை பரிபூரணமாக நம்பப்பட்டன. டீன் ஷீல்ஸ் (Dean Sheils) என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் 60 பழைய கலாச்சாரங்களை ஆராய்ந்து அறுபதில் மூன்று கலாச்சாரங்களில் மட்டும் உடலை விட்டு வெளியே செல்லும் அனுபவங்கள் பற்றிய நம்பிக்கைகள் இருக்கவில்லை என்றும் மற்ற 57 கலாச்சாரங்களில் அதீத நம்பிக்கையிலிருந்து ஓரளவு நம்பிக்கை வரை இருந்திருக்கிறது என்று சொல்கிறார். 

சென்ற நூற்றாண்டில் இந்த மரண விளிம்பு அனுபவமல்லாத உடலை விட்டு வெளியேறும் அனுபவங்களை ஆராய்ந்ததில் சில சக்தி படைத்தவர்களிடம் மட்டும் இந்த ஆராய்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆகி உள்ளது. மற்ற பெரும்பாலான ஆராய்ச்சிகள் அந்த அனுபவங்களை அடைந்தவர்களாக தாங்களாக சொல்லிக் கொண்ட ஆட்களைத் திரட்டி நடத்தப்பட்டன. அப்படி சொல்லிக் கொண்டு வந்தவர்களில் பெரும்பாலானோர் தாங்களாக கற்பனை செய்து கொண்டும், அந்த கற்பனையையே உறுதியாக நிஜம் என்று நம்பிக்கொண்டும் வந்தவர்கள் என்பது ஆராய்ச்சிகளில் தெரிந்தது. பலரை ஒரு அறையில் உள்ளே இருத்தி சற்று தொலைவில் வேறு அறையில் சில பொருள்களை வைத்து அல்லது சில எண்களை கரும்பலகையில் எழுதி வைத்து அதை கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னார்கள். பெரும்பாலானோர் யூகத்தின் பேரில் சம்பந்தம் இல்லாத பதில்களையே சொன்னார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆழ்மன ஆராய்ச்சிகளில் ஆழ்மன சக்தியை நிரூபிக்கும் சில ஆராய்ச்சிகள் இருக்குமானால் அப்படி இல்லாததை சுட்டிக் காட்டும் சில ஆராய்ச்சிகளும் உள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நிரூபிக்க முடியாமல் போனவர்களில் ஒருசிலர் ஒருசில முறை உண்மையாகவே அந்த சக்திகள் பெற்ற அனுபவங்கள் உடையவர்களாக இருந்த போதும் ஆராய்ச்சிக் கூட சூழ்நிலையில் அதை திரும்பவும் செய்து காட்ட முடியாதவர்களாகக் கூட இருக்கலாம். ஆனாலும் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கும் முன்னால் பல போலிகளை சந்திக்கிற நிலைமை ஆழ்மன ஆராய்ச்சிகளில் இருந்து வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். 

உண்மையாக உடலை விட்டு வெளியே சென்றதாக நம்பப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைக் கேட்ட போது பலரும் மூன்று விஷயங்களை ஒருமித்து சொன்னார்கள். உடலை விட்டு வெளியேறிய பின்பும் எதோ ஒரு அபூர்வ சக்தியையும், சில அதிர்வலைகளயும் தாங்கள் உணர்ந்ததாகச் சொன்னார்கள். விசித்திரமான பலத்த சத்தங்களைக் கேட்டதாகச் சொன்னார்கள். தங்கள் உடல்களையும் மற்றவர்களையும் தெளிவாகக் காண முடிந்ததாகச் சொன்னார்கள்.

ஆதாரபூர்வமான மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகளின் மூலம் உடலை விட்டு வெளியேறியவுடன் மனிதனால் கண்களின் உதவியில்லாமலேயே காண முடிகிறது, காதுகளின் உதவியில்லாமலேயே கேட்க முடிகிறது, மொழியின் உதவியில்லாமலேயே பேச முடிகிறது என்பதை தெளிவாக நாம் அறிந்தோம். அந்த ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட மனிதர்கள் மகான்கள் அல்ல, அபூர்வ சக்தியாளர்கள் அல்ல, வாழ்ந்த காலத்தில் ஆழ்மன சக்திகளில் நாட்டம் கொண்டவர்களும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க முடிந்த சாதாரண மனிதர்கள். ஆனாலும் அவர்களால் கூட உடலை விட்டுப் பிரிந்த பின்னர், காண, கேட்க, பேச, புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி. மரண விளிம்பு அனுபவமல்லாத பிற உடலை விட்டு வெளியேறிய அனுபவ ஆராய்ச்சிகள் கூட இதையே தான் உறுதிபடுத்துகின்றன என்பதையும் பார்த்தோம். 

ஆழ்மன சக்திகளைப் பெறும் முயற்சியில் அடுத்த கட்டத்திற்குப் போகும் முன் இது வரை நாம் ஆங்காங்கே ஆராய்ச்சிகளின் மூலமாக அறிந்த சில முக்கிய அடிப்படை உண்மைகள் மற்றும் தகவல்களைத் தொகுத்து சுருக்கமாக திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

ஆழ்மன சக்திகள் மனிதனுக்கு இயல்பானவை. மேல்மட்ட மன நிலையிலேயே மேற்போக்காய் வாழ்ந்து பழகிய மனிதன் ஆழத்தில் புதைந்து இருக்கும் தன் இயல்பான சக்திகளை அறியாமலேயே வாழ்கின்றான். ஐம்புலன்கள் வழியாகவே எதையும் அறிந்து பழகி விட்ட அவனுக்கு பயன்படுத்தாமல் இருக்கின்ற ஆழ்மன சக்திகள் மேல்மட்ட மனநிலைக்கு அற்புதங்களாகவே தெரிகின்றன. 

ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்க முடியும், தூரத்தில் இருப்பவர்களுக்கு செய்தியை அனுப்பவும் பெறவும் முடியும், தொடாமலேயே பொருள்களைப் பாதிக்க முடியும், உடல் மீது முழுக் கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும், மற்றவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும், கடந்த கால, நிகழ் கால, எதிர் கால நிகழ்ச்சிகளை அறிய முடியும், உடலை விட்டு வெளியேறி சஞ்சரிக்க முடியும்.

ஆழ்மன சக்தியை அடையத் தடையாக இருப்பவை அவநம்பிக்கையும், அவசரமும், அமைதியின்மையும். அவற்றை விலக்கினால் ஒழிய ஆழ்மன சக்திகள் சாத்தியப்படுவது கஷ்டம். 

ஆழ்மன சக்திகள் கைகூடுவது மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன எல்லைக்குள் நுழையும் போது தான். கிட்டத்தட்ட எல்லா ஆழமன சாதனையாளர்களும் அப்படிச் சென்றே அற்புத சக்திகளைக் காட்டி இருக்கிறார்கள். மேல்மனதின் பரபரப்பும், சலசலப்பும் குறைந்து ஆழ்மன எல்லைக்குச் செல்ல தியானம் மிகவும் உதவுகிறது. தியானத்தில் மனதை லயிக்கச் செய்து பழக்குவது ஆழ்மன சக்தியை உணரவும், பயன்படுத்தவும் மிக முக்கிய பயிற்சியாகும். தியானத்தின் மூலம் ஆல்ஃபா, தீட்டா அலைகள் கொண்ட அமைதியான மனநிலைக்குச் சென்றால் எல்லா உண்மைகளை உணரவும் முடியும், சக்திகளைப் பெறவும் முடியும்.

நன்றி - திரு.N.கணேசன் , http://enganeshan.blogspot.in

மரண விளிம்பில் 9 அனுபவங்கள்

படித்ததை உங்களுடன் - 6

( திரு.என் .கணேசன் எழுதிய ஆழ்மனதின் அற்புத சக்திகள்  என்ற
  புத்தகத்தில் இருந்து. )

ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான்.

1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி கேட்டல்- 
ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் மரணம் நெருங்குகிறது உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கிறார்கள். அது இனிமையாக இல்லாத ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது இன்னமும் நமக்கு ஒரு புதிராகவே இருக்கிறது. 

2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம் -
கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலைப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாகத் தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்கள் உடலை அவர்கள் தெளிவாகப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்கள். அந்த அறையில் மருத்துவர்களும், நர்சுகளும் பேசிக்கொண்டதை அவர்களால் கேட்க முடிந்ததெனக் கூறினார்கள். மருத்துவர்களும், மற்றவர்களும் என்ன செய்தார்கள், என்ன பேசினார்கள் என்பதை அப்படியே அவர்கள் சொன்னார்கள்.

3) அமைதியும் வலியின்மையும் –
மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் கணத்தில் அந்த வலி மறைந்து விடுகிறது என்றும் பேரமைதி கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

4) சுரங்கவழிப் பாதை அனுபவம் –
பலரும் கும்மிருட்டிற்கு ஒரு சுரங்கவழிப் பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப் பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்கள். இது ப்ளேடோவின் சிப்பாய் கண்ட அனுபவமாகவும் இருக்கிறது. 

5) பூமியைப் பார்த்தல் –
சிலர் சுரங்கவழிப் பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்டசராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். இது கார்ல் ஜங் அனுபவத்தோடு ஒத்துப் போகிறது.

6) ஒளி மனிதர்களைக் காணுதல் – 
சுரங்கவழிப்பாதையின் இறுதியிலோ, பூமியை விட்டும் விலகிப் போன சொர்க்க பூமியிலோ அவர்கள் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்கிறர்கள். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒருசில நண்பர்களோ, நெருங்கிய உறவினர்களோ அங்கிருப்பதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

7) அருட்பெரும் ஜோதியைக் காணுதல்-
ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியைப் பலரும் சொன்னார்கள். ஆனாலும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லை என்றும் கூறினார்கள். (புறக்கண்ணால் பார்க்கும் போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின் உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்)

அந்த தெய்வீகப் பிறவியை மதத்தினர் அவரவர் மதக்கடவுளாகக் கண்டார்கள். சிலர் யேசுகிறிஸ்து என்றும், தேவதை என்றும், பொதுவாக கடவுள் என்றும் சொன்னார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஒளிபடைத்த அபூர்வ சக்தி படைத்த ஒருவரைப் பார்த்ததாகவே கூறினார்கள்.

மேலும் நன்றாக விசாரித்ததில் அந்த பேரொளி விஷயத்தில் அனைவருமே ஒத்துப் போனார்கள். அந்தப் பேரொளியை அவர்களாக அவரவர் கடவுளாக எண்ணிக் கொண்டனர் என்ற முடிவுக்கு ரேமண்ட் மூடி வந்தார். ஆனால் பேரொளி மாத்திரமா என்று கடவுள் நம்பிக்கையோ, மத ஈடுபாடோ இல்லாதவர்களிடம் கூடக் கேட்ட போது அவர்களும் வெறும் பேரொளி மட்டும் அல்ல என்றும் அதற்கு மீறிய தங்களிடம் பேசவல்ல ஒரு சக்தியாக அது இருந்தது என்றும் தெரிவித்தார்கள். 

8) வாழ்ந்த வாழ்க்கையை பரிசீலித்தல் –
அந்த தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காண்பது போல் தத்ரூபமாகக் கண்டதாகவும் சொன்னார்கள். கிட்டத்தட்ட கிறிஸ்துவர்களின் நியாயத் தீர்ப்பு நாள் அல்லது இந்துக்களின் சித்திரகுப்தன் கணக்கு படித்தல் போல் இது இருப்பதாகத் தோன்றுகிறதல்லவா?

9) வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவிக்கப்படல் –
அந்த தெய்வீகப்பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் தெரிவித்தார்கள். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என்று தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாகச் சிலரும் சொன்னார்கள். 

இந்த கருத்துப் பரிமாற்றங்கள் யாவும் அவரவர் தாய்மொழியில் பேசப்பட்டதாக அவர்கள் எவரும் எண்ணவில்லை. ஆனாலும் கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை ஒத்துக் கொள்ளும் அவர்களுக்கு அதை எப்படி என்று விவரிக்கத் தெரியவில்லை. 

1975க்கு பின் பல நாடுகளிலும் இந்த மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற ஆரம்பித்தன. அதில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்னிடம் வகுத்தன. டாக்டர் கென்னத் ரிங் (Dr. Kenneth Ring) என்பவரும் இந்த ஆராய்ச்சிகளை பல வருடங்கள் செய்து 1993 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சி முடிவுகளை விரிவாக வெளியிட்டார். அவருடைய ஆராய்ச்சிகளில் சிலர் அருகில் நடந்த சம்பவங்கள் மட்டுமன்றி மிகத் தொலைவில் நடந்த அவர்களுக்கு மிக நெருக்கமான நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் பார்த்தார்கள், கேட்டார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். இது மனிதர்களுடைய அறிந்துணரும் திறன் அவர்கள் உடல்களுக்கு அப்பாற்பட்டதற்கான அசைக்க முடியாத ஆதாரம் என்று அவர் கூறுகிறார். 

டாக்டர் கென்னத் ரிங், ஷரான் கூப்பர் (Sharon Cooper)என்பவரோடு சேர்ந்து இரண்டாண்டு காலம் குருடர்கள் பெற்ற மரண விளிம்பு ஆராய்ச்சிகளை ஆராய்ந்திருக்கிறார். அதில் சில பிறவிக் குருடர்கள் கூட தங்கள் உடல்லை விட்டுப் பிரிந்த பின் எல்லாவற்றையும் தெளிவாகக் கண்டதை விவரித்ததாகச் சொல்கிறார். இது போன்ற ஆராய்ச்சிகளை பிற்காலத்தில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் (Dr. Bruce Greyson), டாக்டர் பிம் வான் லோம்மெல் (Dr. Pim van Lommel), டாக்டர் மைக்கேல் சாபொம் (Dr. Michael Sabom) போன்றவர்களும் செய்து டாக்டர் ரேமண்ட் மூடியின் ஆராய்ச்சி முடிவுகளை உறுதி செய்தனர்.
அவர்களில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் இன்னும் ஒருபடி மேலே போய் மரண விளிம்பு அனுபவத்தின் போது மயக்க மருந்தின் தாக்கத்தில் சம்பந்தப்பட்ட மனிதர் இருந்தாரா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். ஒருவேளை சிகிச்சையின் போது தரப்பட்ட மயக்கமருந்தின் தாக்கத்தால் கற்பனைக் காட்சியைக் காண்கிற நிலை இருக்கிறதா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ள எண்ணினார். ஆனால் மயக்க மருந்து ஆதிக்கத்தில் இல்லாத நபர்கள், மயக்க மருந்து ஆதிக்கத்தில் இருந்தவர்களை விட அதிகத் தெளிவுடன் அந்த நிகழ்ச்சிகளை விவரிக்க முடிந்ததைத் தன்னால் அறிய முடிந்தது என்றும் கூறினார். 

இந்த அனுபவங்களின் ஆராய்ச்சிகள் புலன்வழியல்லாமலேயே மனிதர்களால் உடலை விட்டு நீங்கும் போது பார்க்க, பேச, கேட்க, உணர முடிகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன அல்லவா? எல்லாராலும் அப்படி உடலை விட்டுப் பிரிகிற போது அடைய முடிகிற இந்த அபூர்வ சக்தி மனித உடலில் உள்ள போதே சித்தர்கள், யோகிகள், அபூர்வ சக்தியாளர்கள் ஆகியோரால் அடைய முடிகிறது. ஏனென்றால் அவை மனிதனுக்கு இயல்பாகவே அறிய முடிகிற சக்திகள். உடலுக்குள் புகுந்த பின் ஐம்புலன்கள் வழியாகவே அறிய ஆரம்பித்து இந்த இயல்பான அபூர்வ சக்திகளை உபயோகிக்காததால் அவன் இழந்து விடுகிறான். முறையாக முயற்சித்தால், பயிற்சி செய்தால் இழந்ததை அவன் மறுபடி பெற முடிவதில் வியப்பென்ன இருக்கிறது?

சிந்தித்துப் பாருங்களேன்.

மரணத்திற்குப் பின் என்ன?

படித்ததை உங்களுடன் - 5

( திரு.என் .கணேசன் எழுதிய ஆழ்மனதின் அற்புத சக்திகள்  என்ற
  புத்தகத்தில் இருந்து. )



மரணத்திற்குப் பின் என்ன ஆகிறது என்கிற கேள்வி மனிதன் சிந்திக்க ஆரம்பித்து விட்ட காலத்திலேயே அவனுள் எழுந்த கேள்வி. இதற்குப் பதிலாக பல சித்தாந்தந்தங்களை மனிதன் உருவாக்கி இருந்தாலும் அந்த சித்தாந்தங்கள் சரியா என்று சரிபார்த்துக் கொள்ளுதல் இயலாத காரியமாகவே மனிதனுக்கு இருந்து வந்தது. ஏனென்றால் இறந்து விட்ட பின்னரே தெரிந்து ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அவை. இறந்து விட்டாலோ திரும்பி வந்து சொல்லுதல் சாத்தியமில்லை. இந்த சிக்கல் மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்வியைப் பெரிய கேள்விக்குறியாகவே மனிதனுக்கு தக்க வைத்து விட்டது.

பெரும்பாலான எல்லா மதங்களும் தங்கள் தங்கள் சித்தாந்தங்களைச் சொல்லி மரணத்திற்குப் பின் இது தான் திட்டவட்டமாக சொன்னாலும் பகுத்தறிவு கொண்ட மனிதன் அது சரியா என்று ஆராய ஆசைப்பட்டான். காரணம் மதங்களின் சித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. பல அறிஞர்களும் தங்கள் பங்குக்கு சில சித்தாந்தங்களைச் சொன்னார்கள். கிழக்கத்திய நாடுகளில் கூடு விட்டு கூடு பாய்தல், மரணத்திற்குப் பிந்தைய பயணம் போன்ற அமானுஷ்ய பதிவுகள் அதிகமாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் அது போன்ற பதிவுகள் குறைவே. ஆனாலும் அவையும் இதில் மேற்கொண்டு அறியும் ஆவலைத் தூண்டுவனவாக இருந்தன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ப்ளேடோ (Plato) என்ற கிரேக்க ஞானி தன் குடியரசு (Republic) என்ற நூலில் ஓரிடத்தில் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட சிப்பாய் ஒருவன் கொள்ளி வைக்கப்படும் முன் எழுந்து தன் தற்காலிக மரணத்திற்குப் பின் என்ன ஆயிற்று என்று விவரிப்பதாக எழுதியிருக்கிறார். அந்த விவரிப்புகளில் சில பிற்கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிற்கு ஒத்து வருகின்றன. 

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்து தத்துவஞானி விசேஷ அனுமதி பெற்று பிரமிடின் உள்ளே ஓர் இரவு தனியாகத் தங்கினார். அந்த இரவில் அவர் உடலை விட்டு வெளியேறி தன் உடலைத் தெளிவாகப் பார்த்ததாகத் தெரிவிக்கிறார். பிரமிடுக்குள் அவர் தனியாகக் கழித்த அந்த இரவின் அனுபவங்கள் பற்றி ரகசிய எகிப்தில் ஒரு தேடல் (A search in secret Egypt) என்ற புத்தகத்தில் சுவாரசியமாக எழுதியுள்ளார். அந்த அனுபவத்தில் நம் தற்போதைய அலசலுக்குத் தேவையான மரண் விளிம்பு அனுபவப் பகுதியை மட்டும் பார்ப்போம்......

”....அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை. 

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் "நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு" என்ற எண்ணம் வந்து போயிற்று.

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது......”

1944ல் உலகப் புகழ் பெற்ற மனவியல் நிபுணர் கார்ல் ஜங் (Carl Jung) சுவிட்சர்லாந்து மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பால் தனக்கு ஏற்பட்ட சிறிது நேர மரண அனுபவத்தை விரிவாக தன் சுய சரிதத்தில் எழுதியுள்ளார். அவரது அனுபவமும் பிற்கால ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த அனுபவங்களோடு ஒருசிலவற்றில் ஒத்துப் போகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவர் உடலை விட்டுப் பிரிந்து இந்த பூமியையே சில மைல்கள் தொலைவில் கண்டதாகக் கூறி அண்டசராசரத்தில் பார்த்த அந்த வியத்தகு காட்சி எப்படி இருந்தது என்றும் எழுதியுள்ளார். அதற்குப் பின் பற்பல ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்று மனிதன் பார்த்த காட்சியும், கார்ல் ஜங்க் கண்ட காட்சியும் ஒத்துப் போனது தான் பெரிய ஆச்சரியம். 

இது போன்ற நிகழ்வுகள் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களையும் கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இது போன்ற அனுபவங்கள் கற்பனையா இல்லை நிஜமா என்று அறிய விரும்பினார்கள். அதை ஆராய முற்பட்டார்கள். அதற்கு மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த மனிதர்களின் அனுபவங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மரணத்திற்குப் பிறகு என்ன என்ற கேள்விக்கு முழுவதுமாய் விரிவான விடை கிடைக்கா விட்டாலும் மரணத்திற்குப் பின் உடனடியாகச் சில நிமிடங்கள் என்ன நடக்கின்றன என்பதை விஞ்ஞானம் ஓரளவு கண்டு பிடித்திருக்கிறது. 

இந்த ஆராய்ச்சிகள் தனிப்பட்ட அளவில் அங்கொன்றும், இங்கொன்றும் நடந்து கொண்டிருந்தாலும் மிகவும் பிரபலமானதும், மேலும் அதிக ஆராய்ச்சியாளர்களை ஈர்த்ததும் டாக்டர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) என்பவர் 1975 ஆம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை (Life after Life) என்ற புத்தகம் வெளியான பின்பு தான். மரணத்தின் விளிம்பு வரை வந்து சில வினாடிகள் முதல் ஓரிரு நிமிடங்கள் வரை இதயத்துடிப்பும், மூச்சும் நின்று போய் பின் மறு உயிர் பெற்ற மனிதர்களை மருத்துவமனைகளின் ஆவணங்கள் மூலம் கண்டறிந்து பேட்டி எடுத்து அவற்றை மீண்டும் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டு ரேமண்ட் மூடி ஆழமான ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். மரணத்தை எட்டிப்பார்த்த 150 நபர்களை வைத்து பல ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செய்த ஆராய்ச்சிகளை தன் புத்தகத்தில் விரிவாக ரேமண்ட் மூடி எழுதியிருக்கிறார். மரண விளிம்பு அனுபவம் (NDE-Near Death Experience) என்ற சொற்றொடரை முதலில் உபயோகப்படுத்தியது ரேமண்ட் மூடி தான். அந்த தொடரே இன்று வரை இது குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. 

அவர் ஆராய்ச்சி செய்த அந்த 150 பேருமே பல தரப்பட்ட மனிதர்கள். ஆனால் அவர்கள் சொன்ன அனுபவங்களில் சில அனுபவங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்கள் சந்தித்த அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தன் நூலில் வியப்புடன் கூறுகிறார். அவை என்ன தெரியுமா?

நன்றி - திரு.N.கணேசன் , http://enganeshan.blogspot.in

Monday, May 13, 2013

பழனி மூட்டை சாமிகள் - ஒரு பக்தையின் அனுபவம்

மூட்டை சாமிகளின் பதிவை படித்த பக்தை ஒருவர் அனுப்பிய மின்-அஞ்சல்

ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க
பகவான் ஞான வள்ளல் திருவடிகளே சரணம் சரணம் சரணம்



சற்குருவின் திருவடியினை பணிந்து அவர் அருளாலே அவரை வணங்கி அவருடைய குழந்தையாகிய அடியவளுக்கு  பகவான் கருணா மூர்த்தி தரிசனம் தந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆரம்ப காலத்தில் எனக்கு பகவான் மீது நம்பிக்கை இல்லை, ஆனால் எனது தந்தை பகவானை வழிபடுவார். எங்கள் மதுரையில் பகவானால் நிறுவப்பட்ட சபை உள்ளது.எனது தந்தை அங்கு செல்வார். எனக்கு அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் இருந்தது. கொஞ்ச காலம் கழிந்து சபையின் முதல் ஆண்டு விழாவின் போது பகவானின் அருளால் எனது தந்தையுடன் சென்றேன். சுவாமியின் பக்தர் ஒருவர் சொற்பொழிவு ஆற்றினார் பிறகு அவர் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறினால் உங்களுக்கு ஒரு பரிசு தருவேன் என்றார். உடனே எனக்கு நாமும் பரிசு வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அவர் "பகவான் ஆரம்ப காலத்தில் எந்த மலையில் வசித்தார் " என்ற கேள்வியை கேட்டார். நான் நினைத்தேன் நமக்கு இந்த சுவாமியை பற்றி தெரியாதே நாம் எப்படி பரிசு ங்குவோம் என்று. அவர் பல கேள்விகளுக்கு பிறகு கடைசியாக நான் பேசிய சொற்பொழிவில் இருந்து ஓரு கேள்வி கேட்கிறேன் என்று சொல்லி கேள்வியை கேட்டார். அதற்கான பதில் தெரிந்தவர்கள் கையை உயர்த்தினார்கள். அதில் இந்த அடியேனும் ஒருவர். அவர் என்னிடம் பதில் கேட்டார், நான் சரியான பதிலை கூறியவுடன் என்னை அழைத்து அந்த பரிசை தந்தார். பரிசு  பகவானை பற்றிய புத்தகம். இதன் மூலம் நான் நினைத்தேன் "நமக்கு என்ன கொடுக்கணும் எப்ப கொடுக்கணும்" என்பதை பகவான் அறிவார்.

அதன் பிறகு நான் சபைக்கு வார வாரம் செல்வேன் ஆனால் பகவானை பார்த்தது இல்லை. சில மாதங்கள்  சென்ற பிறகு பகவானின் அருளால் அவரை தரிசிக்க செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற பொழுது பகவான் எனக்கு சில வேலைகளை  கொடுத்தார்கள். அப்பொழுது சுவாமி சொன்னார்கள்  "கோபக்காரி ஆணவக்காரி" என்று . அப்பொழுது எல்லாம் நான் மிகவும் கோபப்படுவேன், அதை எனக்கு உணர்த்தினார். அன்று இரவு பகவானிடம்  ஊருக்கு போய் விட்டு வருகிறோம் என்று சொன்னோம் அதற்கு பகவான் போய் உட்காருங்கள் என்றார். சுவாமி எது சொன்னாலும் செய்தாலும் அது நம்முடைய நன்மைக்கே. சிறிது நேரம் சென்ற பிறகு நாங்கள் பகவானிடம்  ஊருக்கு போய் விட்டு வருகிறோம் என்று சொன்னோம்.பகவான் ஒரு திசை சொல்லி போகசொன்னார்கள். பகவானின் அருள் தரிசனத்துக்கு பிறகு பற்பல மாற்றங்கள் என்னுடைய வாழ்வில் நிகழ்ந்தும், நிகழ்ந்துகொண்டும் உள்ளன.

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்றும்  இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே. 
என்ற பாடலுக்கேற்ப கற்பக விருச்சமான பகவான் சற்குரு பக்தர்களுக்கு வேண்டியதை அருள காத்து கொண்டு இருக்கிறார்.

நாம்  பகவானிடம் முழுவதுமாக சரணடைந்து விட்டால் எந்த ஒரு செயலையும் ஆராய்ந்து தான் செய்வோம். நாம் ஏதாவது தவறு செய்துவிட்டால் பகவானிடம் தண்டனை கிடைக்கும் என்ற எண்ணமே நம்மை நல்வழிப் படுத்தும். சுவாமி நமக்கு சொல்லும் பாடம் "வாழ்க வளமுடன் நேர்மையாக". நாம் நம் வாழ்வில் எல்லா செயல்களிலும் இந்த நேர்மையை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டால் பகவானின் அருள் நமக்கு பரிபுரனமாக கிடைக்கும்.

பகவானுக்கு நாம் மன கோவில் கட்டி சற்குருவின் திருநாமத்தை இடைவிடாது சொல்லி அந்த கருணா மூர்த்தியின் அருளை பெற்று வீடு பேறு அடைய முயல்வோம்.

அன்பு மாறா இல்லறமும் 
ஆசை இல்லா தர்மமும்
இன்னல் தார உறவுகளும் 
ஈகை உள்ள நெஞ்சமும்
உண்மை உணரும் லட்சியமும் 
ஊக்கம் அளிக்கும் நட்புமும் 
என்றும் மாற நற்குணமும் 
ஏவல் கேட்கும் பணிவும்
ஐயம் இல்லா வாழ்வும்
ஒழுக்கம் மாற இயக்கமும் 
ஓம் கார பெருமமும்
பிறப்பு அறுக்கும் ஒவ்வுச்சதமும்  
ஒன்று சேர தந்து அருள்வாய் 
சச்சிதானந்த சற்குருவே சரணம் சரணம் சரணம் 
                              
 - அன்பே கடவுள் சற்குரு வாழ்க
   சற்குரு வாழ்க சற்குருவே துணை
   சற்குரு பாதம்  சரணம் பாதம்.



(உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்தமைக்கு நன்றி)



நடமாடும் சித்தர் பழனி சாமிகள்

Thursday, May 9, 2013

பழனி மூட்டை சாமிகள் - ஒரு பக்தரின் அனுபவம்


மூட்டை சாமிகளின் பதிவை படித்த பக்தர் ஒருவர் அனுப்பிய மின்-அஞ்சல்


விநாயக பெருமான் மலரடிகள் போற்றி!! போற்றி !!!
முதல்வனே முத்தி நலம் சொன்னவனே ,
கண நாதனே அருள் புரிய வேண்டுகிறேன்...


குரு வணக்கம்
பாமரன் உருவில் வந்த பரமனே
பக்தனின் பாவத்தை மூட்டையாக சுமக்கும் இறைவனே,
பழனி கனக்கன்பட்டியில் வாழும் கடவுளே
எல்லை இல்லா கருணை மாக் கடலே
ஏற்றி வைத்த தீபத்தின் ஒளியே ,
எங்கள் சற்குரு ஞான வள்ளலே ,
நின் பாதம் போற்றி போற்றி !!!
முதல்வனே முத்தி நலம் சொன்னவனே ,
கண நாதனே அருள் புரிய வேண்டுகிறேன்...
நம் பாரத தேசத்தின் பெருமை அனைத்தும் நம் கடவுளை வழிபடும் முறையே சாரும் என்பதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை. ஏனென்றால் நம் முன்னோர்கள் பிரபஞ்ச ரகசியத்தை நெடுங்காலமாக ஆராய்ந்து எப்படி இந்த ஜீவாத்மா அந்த பரமாத்மாவுடன் இரண்டற கலப்பது என்ற ஆன்ம அறிவை பெற்று இருந்தனர். கருவில் பிறந்த மனிதனும் தெய்வ நிலையை அடையலாம் என்பதை நமக்கு முன்னர் வந்த குரு மார்கள் அனைவரும் பிறந்து, வளர்ந்து, வணங்கி , அறிந்து ,உணர்ந்து , போதித்து  இறை தன்மையை அடைந்து வழி காட்டி இருக்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் அவர்களின் வழிகாட்டுதல் படி நடந்து நம் வாழ்வியலில் கடைபிடித்து , அவர்களின் அருள் உணர்வுகளை பெற்று உணர்ந்து எல்லாம் வல்ல அருட் பெரும்ஜோதி ஆண்டவருடன் கலந்து மரண மில்லா பெரு வாழ்வு பெறுவதே இந்த ஆத்மா, மனித உரு எடுத்ததின் பயன்..
ஞான வள்ளல் சற்குரு பழனி மூட்டை சுவாமிகள்

அப்படி நம்மோடு வாழ்ந்து கொண்டு ,பக்தர்களின் பாவங்களை மூட்டையாக சுமந்து , உலகம் மெங்கும் தம் பக்தர்களை காத்து ரட்சித்து அருள் புரியும் பழனி கனக்கன் பட்டியில் வாழும் ஞான வள்ளல் சற்குரு பழனி மூட்டை சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி !!!

சற்குரு நாதரே, எம் இறைவனே உங்களின் பாதம் பணிந்து வணங்கி உங்களை தரிசித்த பாக்கியத்தையும் , அதனால் அடியேனின் வாழ்கையில் ஏற்பட்ட மாற்றத்தையும் எழுதுவதற்கு அருள் புரிய வேண்டுகிறேன்...

அடியேன் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு கரூரில் வேலை செய்து கொண்டு இருந்தேன். கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு தினமும் சென்று அர்த்தஜாம பூஜையும், அதனை தொடர்ந்து காணவே கண் கோடி வேண்டும் பள்ளியறை பூஜையும் தரிசிக்கும் பாக்கியத்தை பெற்று  இருந்தேன். மேலும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கரூரில் உள்ள ஷிர்டி சாய் நாதரையும் தரிசிக்கும் பெரும் பேற்றினை பெற்று இருந்தேன். எங்கள் குடும்பத்தின் ஆணிவேராக இருந்த எம் தந்தையார் சிவ பதம் அடைந்து விட்டார். என் வாழ்க்கையே இருண்டு போய்விட்ட காலம் அது. சுமார் நான்கு தலைமுறையாக தேவாரம் திருவாசகம், திருவருட்பா பாடி சிவனாரை வழிபட்ட எங்கள் குடும்பம் எம் தந்தையாரை இழந்த பின்பு அனைத்தையும் இழந்ததாகவே இருந்தது. அடியேன் சிறு வருமானமே பிரதானம் என்று வாழ்க்கை நடத்தி கொண்டு இருந்தேன் .

சுவாமியின் புகைப்படம் :
இதற்கிடையில் எனது கம்பெனியின் முதலாளி நல்ல மனிதர் சற்குருவை தரிசித்து வந்து பழனி சுவாமிகளின் புகைப்படம் ஒன்றை எனக்கு தந்தார். அந்த புகைப்படத்தை வாங்கி பார்க்கும் போதே ஒரு நல்ல உணர்வு எனக்குள் தோன்றியது. அதன் பிறகு அதை வீட்டிற்கு எடுத்து சென்று வழிபட்டேன்.
சுவாமியின் தரிசனம்:
சில மாதங்கள் சென்ற பின்பு என்னுடன் வேலை பார்க்கும் நண்பரின் உறவினர் எனது நண்பரிடம் பழனி சுவாமிகள் பற்றி கூறி உள்ளார். சற்குரு நாதரின் அருள் ஆசியால் அவர் வாழ்கையில் ஞான மார்கத்தின் திறவுகோலாக அமைந்ததை பற்றி கூறி உள்ளார். இதை பற்றி என்னிடம் என் நண்பர் தெரிவித்தார். நாங்கள் இருவரும் சற்குரு நாதரை தரிசிப்பது என்று முடிவு செய்தோம். திங்கள் கிழமை போவது என்று முடிவு செய்து கொண்டு நான் வார விடுமுறைக்கு திருச்சி சென்று விட்டேன். அவர் கரூரில் இருந்து வருவதாக தெரிவித்தார். நாங்கள் இருவரும் அவர் அவர் ஊர்களில் இருந்து அதிகாலை புறப்பட்டு கனக்கன் பட்டி வந்து அடைந்தோம். சுவாமிகளுக்காக ஒரு போர்வை எடுத்து சென்றேன். கனக்கன் பட்டி பஸ் ஸ்டாண்ட் இல் டீ குடித்த பின்பு , சுவாமிகள் பற்றி அந்த டீ கடையில் விசாரித்தோம். சுவாமிகள் கொட்டகையில் இருக்கிறார் என்று தெரிவித்தனர் . சுவாமிகளின் படம் அந்த டீ கடையில் இருந்தது. சுவாமிகள் இருக்கும் கொட்டகை நோக்கி நடந்தோம் சுற்றி எங்கும் மலை , அதி காலை பனி , தென்னை மரங்கள் , விவசாய நிலங்கள் ஒரு அருமையான சூழலாக இருந்தது. ஒரு அரை மணி நேரம் பேசி கொண்டே நடந்து கொண்டு இருந்தோம். மனதில் சிறு பயம் வேறு இருந்தது சுவாமிகள் பார்த்த உடன் என்ன சொல்வாரோ. இதற்கெல்லாம் தகுதி உண்டா என்று மனதிற்குள் கேள்வி அவ்வபோது எழுந்து கொண்டு இருந்தது. ஷிர்டி சாய் நாதரையும் , காஞ்சி மஹா பெரியவாவையும் வேண்டி கொண்டு நடந்து கொண்டு இருந்தோம். அப்போது சிகப்பு நிற மாருதி வேன் எங்களை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அருகில் வந்தவுடன் தான் கவனித்தோம். மாருதி வேன் ஓட்டுனரின் பக்கத்தில் எளிமையின் உருவமாக அமர்ந்து இருந்தார். தரிசனம் கிட்டியது , எங்களை பார்த்த உடன் கையை அசைத்தவாரே எங்களை கடந்து சென்றார். எங்கள் இருவருக்கும் சுவாமியை தரிசனத்தால் கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க அவரின் செய்கை ஒன்றும் புரியாததால் சற்று குழப்பத்துடன் சென்றோம்.

கொஞ்ச தூரம் நடந்து அவரின் கொட்டகையில் அமர்ந்தோம். எங்களுக்கு முன்னரே அங்கு இருவர் இருந்தனர். அவர்களிடம் பேசி கொண்டு இருந்தோம் சுவாமிகளை பற்றி மெய் மறந்து கேட்டு கொண்டு இருந்தோம். அந்த கொட்டகை விட்டு வெளியில் வந்து பார்த்தோம். சுற்றிலும் விவசாய நிலங்கள் , ஆங்காங்கே மரங்கள் , நேர் எதிர் திசையில் பெரிய மலை. பார்க்கவே சற்று பிரமிப்பாக இருந்தது.கொட்டகையின் வெளியில் உள்ள மரங்களை உற்று கவனித்தோம் ஒவ்வொரு மரங்களின் கிளைகளில் நூல்களில் கட்டி தொங்க விட பட்ட பாலிதீன் பைகள் , பாட்டில்கள் இருந்தன. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தோம் இதை பற்றி அவர்கள் சொன்னார்கள், இது எல்லாம் எங்கு வரும் அடியவர்களின் பாவ மூட்டைகள் , இதை அவர் அவர்களின் கணக்கிற்கு ஏற்ப சுவாமிகள் தொங்க விட்டு உள்ளார் என்று கூறினர் . அவர் அமர்ந்து செல்கின்ற வேனுக்கு பின்னாலும் பெரிய பெரிய அழுக்கு மூட்டைகள் இருக்கும் என்றே தெரிவித்தனர். நாங்களும் பார்த்தோம் என்றே தலை அசைத்தோம். நேரம் ஆக ஆக கூட்டம் வந்து கொண்டு இருந்தது. படித்தவன் , பாமரன் , ஏழை , பணக்காரன் , சிறியவர் , பெரியவர் , உயர்ந்தோர் தாழ்ந்தோர் , நல்லோர் , தீயவர் என்ற இந்த ஒரு சிறு பாகுபாடும் சுவாமிகள் இடத்தில் இல்லை .அவரிடம் இல்லை என்ற வார்த்தை இது மட்டும் தான் என்பதில் அவரை வணங்கி வரும் அனைத்து அடியார்களுக்கும் நன்றே தெரிந்த ஒன்று. 

எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு இருந்தோம். வெளியில் சென்ற சுவாமிகள் கொட்டகைக்கு வந்தார்கள். வேனில் இருந்து இறங்கி நாங்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்தின் அருகில் நடந்து கொண்டு இருந்தார்கள். அனைவரின் முகங்களை பார்த்து கொண்டு எது ஏதோ சொல்லி கொண்டு எங்கும் அங்கும் நடந்து கொண்டு இருந்தார்கள் .அவரின் பார்வை நம் அனைவரின் உள்ளத்தையும் ஊடுறுவி சென்று விடும் என்பதை நீங்கள் சென்று தரிசித்தால் உணர்வீர்கள் என்பதில் ஐயமில்லை. அவரே பார்த்து கொண்டே நம் கவலைகளை, நமக்கு இருக்கும் கஷ்டங்களை மனதிற்குள் நினைக்க சொல்லி சற்குருவின் முகம் பார்த்து வேண்ட சொன்னார்கள் அங்கு உள்ள அடியவர்கள். அவ்வாறே வேண்டி கொண்டு இருந்தேன். பிறகு மீண்டும் வேனில் ஏறி சென்று விட்டார்கள். இப்படி வருவதும் போவதும் ஆகவே இருந்தார்கள். வேனில் வந்தவுடன் நிறுத்தாமல் அனைவரையும் பார்த்து விட்டு திரும்பி செல்வார்கள். சில நேரங்களில் இறங்கி அனைவரையும் பார்த்து கொண்டு அங்கும்மிங்கும் நடப்பார்கள் . நேரமும் கடந்து கொண்டு இருந்தது அமர்ந்து கொண்டு பகவான் நாமத்தை சொல்லி கொண்டே இருந்தோம். மாலை ஆகி விட்டது. அதற்குள் ஒரு அன்பர் சுவாமிகள் கனக்கன் பட்டி நுழை வாயிலில் கொஞ்ச தூரத்தில் உள்ள அடியவர்களுக்கு வேலை கொடுத்து கொண்டு இருக்கிறார் என்றார்கள். சரி அப்படியே பார்த்து விட்டு செல்லலாம் என்று முடிவு எடுத்து சென்றோம். அங்கு சென்றவுடன் ஒருவர் சற்குருவின் கால்களை அமுக்கி விட்டு கொண்டு இருந்தார் , நிறைய பேர்களை மண் வெட்டி போட சொல்லி கொண்டி இருந்தார்கள்.மற்றும் சிலரை பார்த்து கற்களை தூக்கி வேறு இடத்தில் வைக்க சொல்லிக்கொண்டு இருந்தார்கள், வேறு சிலரை குப்பை மேட்டினை கரைக்க சொல்லி கொண்டு இருந்தார்கள். நாங்கள் இருவரும் சென்றோம். என் கூட வந்தவரை மண்ணை அள்ளி போட சொன்னார்கள். நான் கையில் கொண்டு வந்த போர்வை அவரிடம் கொடுப்பதற்காக அவர் அருகில் சென்றேன். என்னை பார்த்துடன் பெரும் கோபத்துடன் கெட்ட வார்த்தையில் திட்டினார்கள். மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அழுதும் விட்டேன் . கைகளை நீட்டி மேற்கே போ என்றார்கள். கை காட்டிய இடத்தில் போய் நின்றேன் .திரும்பவும் கைகளை நீட்டி தெற்கே போ என்றார்கள். காலையில் இருந்து ஒரு வேலையும் செய்யாமல் இருக்கிறான் என்றார்கள். எந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது. ஏன் என்றால் அனைவரும் வணங்கும் சற்குருவின் முன்னால் நான் மட்டும் திட்டு வாங்கியது என்னை மிகவும் பாதித்தது. யாருக்கும் மனதளவில் கூட தீங்கு நினைத்தது இல்லையே என்று அழுகையை அடக்க முடியாமல் அங்கு இருந்து சென்றேன். நான் வணங்கிய அனைத்து தெய்வங்களையும் எனக்கு ஏற்பட்டதை நினைத்து திட்டி தீர்த்து விட்டேன். மீண்டும் மீண்டும் அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என் மனதிற்குள் ஒலித்து கொண்டு இருந்தது. கொஞ்சம் தூரம் நடந்து வந்து அங்கு ஒரு மாட்டு கொட்டகைக்கு அருகில் நின்று கொண்டு அழுது கொண்டு என்னுடன் வந்தவருக்காக காத்து கொண்டு இருந்தேன்.சிறிது நேரம் கழித்து அவர் வந்தார். அவருடன் சேர்த்து அங்குள்ள அனைவரும் வந்தனர். அவரை பார்த்த உடன் மிகவும் அழுதுவிட்டேன். அவர் எனக்கு ஆறுதல் சொன்னார். அப்போது ஒரு வயதான பாட்டி என் அருகில் வந்து உன்னை சுவாமி திட்டியதற்காக வருத்த படதே தம்பி . ஏன் என்றால் அவர் முன்பு திட்டி பின்பு அணைத்து கொள்வார்கள் என் வாழ்விலும் அதுவே நடந்தது என்று ஆறுதல் சொன்னார்கள். பிறகு என்னுடன் வந்தவரிடம் எனக்கு மனதிற்கு கவலையாக உள்ளது பழனி சென்று முருகனை தரிசித்து விட்டு வருகிறேன் என்று பழனி பஸ்சில் சென்றேன். 
பஸ்சில் இருந்த சிலர் சுவாமிகளிடம் வந்தவர்கள் அவர்கள் என்னை ஒருவாறு பார்க்க எனக்கு வெட்கமும் அழுகையாக வந்தது. அதே கவலையுடன் பழனி சென்றேன். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இல்லை. பழனி முருகனின் அர்த்தஜாம அபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டினார்கள் . முருகனை பார்த்த உடன் கதிறி விட்டேன் என்னை அறியாமல். அருகில் இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்க்க அழுகையை அடக்கி கொண்டேன்.

பழனி சித்தரிடம் அனுப்பிய பழனி சுவாமிகள் :

தரிசனம் முடிந்து வலம் வந்து கொண்டு இருந்த போது என்னை அறியாமல் அங்கு வயது உள்ள இரண்டு நண்பர்களிடம் நடந்ததை விவரித்தேன். நான் என்ன மன நிலையில் அப்படி சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை. அவர்கள் என்னை ஆறுதல் படுத்தி நீங்கள் பழனி அடிவாரத்தில் பழனி சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை சென்று பாருங்கள் என்று சொன்னார்கள். எனக்கு பயம் வேறு எப்பொழுது தான் ஒருவரிடம் திட்டு வாங்கினேன். மீண்டும் என்றால் என் மனம் தாங்காது என்றேன். அதற்கு அவர்கள் சொன்னார்கள் அவர் யாரிடமும் பேச மாட்டார்கள் என்று சொன்னார்கள். மனதை தேற்றி கொண்டு சென்றேன். மெல்ல அவர் இருக்கும் இடத்தை விசாரித்து கொண்டு அவர் இருக்கும் இடம் நோக்கி சென்றேன். நீண்ட தெரு ஓரத்தில் ஒரு சிறிய குடிசை ஒருவாறு ஒருக்களித்து உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். அவரை பார்த்துடன் ஒரு ஓரத்தில் அவரை பார்த்த மாதிரி உட்கார்ந்தேன். என்னை வேகமாக திரும்பி பார்த்தார்கள். அவரின் நீண்ட தலை முடியெல்லாம் பறந்து அவரின் முதுகில் விழுந்தது. என்னை கூர்ந்து பார்த்தார்கள். அவரின் அந்த பார்வையில் நடுங்கி விட்டேன். பிறகு மீண்டும் சுய நிலைக்கு வந்து மனதிற்குள் அன்று காலையில் இருந்து அன்று இரவு முழுவதும் நடந்தவை அனைத்தையும் மனதிற்குள் அவரிடம் சொன்னேன். அதன் பின்பு என் கஷ்டங்களை மனதிற்குள் நினைத்து வேண்டினேன். ஒரு கால் மணி நேரம் கடந்து இருக்கும் அப்போது தரையை தன் கைகளால் ஓங்கி அடித்தார்கள். தீடிரென்று அவரின் செய்கையால் சற்றே நடுங்கி விட்டேன். அதற்குள் அங்கு இருந்த டீ கடை காரர் என்னை பார்த்து கேட்டார். இந்நேரம் பழனி சித்தர் தூங்கி இருப்பார்கள் ஆனால் வெகு நேரம் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள் ஏன் என்று தெரிய வில்லை என்றார்.யாரோ தரிசனத்துக்காக இன்று வர போகிறார்கள் நினைத்து கொண்டு இருந்தோம் ஏன் என்றால் நான் எப்போதே அவருக்கு போர்த்திகொள்ள போர்வை வைத்து விட்டேன் இருந்தும் வெகு நேரம் உட்கார்ந்து இருந்தார்கள் பார்த்தால் நீ வந்து நிற்கிறாய் என்று தெரிவித்தார்கள். எனக்கு இப்போது மனதிற்குள் இதமான மாற்றத்தை உணர முடிந்தது. எனக்கு உடனே போர்வை ஞாபகம் வந்தது .அவரிடம் நடந்தவற்றை விவரித்தேன். சரி நீ கவலை படாதே என் கூட வா என்று கூட்டி சென்று உள்ளே வந்து சுவாமிகள் பக்கத்தில் இருக்கும் திரு நீறு எடுத்து பூசி கொள்ள சொன்னார். அதற்கு முன்னர் அவர் சொன்னார் பாவிகள் யாரவது உள்ளே வந்தால் அடிப்பார் என்றார். மீண்டும் மனதிற்குள் பயங்கர கலக்கம். எப்பொழுது தான் திட்டு வாங்கி வந்து இருக்கிறேன். அடி வேறு வாங்கி விட்டால் அதற்கு மேல் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை என்றே நினைத்து தயங்கினேன். அவர் விடா பிடியாக கூட்டி சென்றார். ஒரு வித தயக்கத்துடனே உள்ளே சென்றேன். அந்த டீ கடைக்காரர் பயபடாதே உள்ளே வா என்று எனது அச்சம் கலைத்தார். உள்ளே வந்த என்னை திருநீறு அள்ளி பூசி கொள்ள சொன்னார். மனதிற்குள் சித்தரை நன்றாக வேண்டி கொண்டு திருநீற்றினை அள்ளி பூசி கொண்டேன் .என்னை தன் பார்வைகளை கூர்மையாக்கி என்னை உற்று நோக்கினார்கள். அப்பொழுதே எனக்குள் பெரிய மாற்றத்தை உணர்தேன் .பிறகு வெளியில் வந்தோம். சித்தர் உறங்குவதற்காக படுத்துக் கொண்டார்கள். போர்வை பற்றி கூறினேன். என்னிடம் இருந்து போர்வையை வாங்கி கொண்டு அவர் சொன்னார் நான் இதை அவர் மீது போர்த்தி விடுகிறேன் போர்த்தி கொண்டால் நல்லது விசிவிட்டால் வீட்டிற்கு எடுத்து சென்று வழிபடு என்று கூறினார். அவர் போர்த்தி விட்டார் . அவர் இரண்டவது கூறியதே இறுதியில் நடந்தது. சித்தர் அதை எடுத்து விசி விட்டார்கள். பிறகு அவர் என்னிடம் சொன்னார் பராவில்லை தம்பி நீ கொடுத்து வைத்தவன் தான் ஏன் என்றால் சுவாமிகள் உடம்பின் மீது போர்த்திய போர்வையை நீ வீட்டில் வைத்து வழிபட உனக்கு கிடைத்ததே பெரும் பாக்கியம் அல்லவா என்று கூறினார் . எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.இன்றும் அவரின் ஆசிர்வாதமாக நினைத்து வீட்டில் வைத்து வழிபடுகிறேன். அதன் பிறகு அவரிடம் நன்றி கூறி விடை பெற்று மீண்டும் ஒரு முறை சுவாமியை வணங்கி விடை பெற்றேன். நடந்த சம்பவத்தை எண்ணி வாழ்க்கைய நகர்த்தி கொண்டு இருந்தேன்.சில மாதங்கள் சென்றது. பிறகு ஒரு நாள் பழனி சித்தர் என் கனவில் வந்து கூறினார்கள்.உன் நல்லதுக்கு தாண்டா தரையில் ஓங்கி அடித்தேன் என்று கூறினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பழனி மூட்டை சுவாமிகள் என்னை திட்டியர்தற்கான காரணமும் அதனால் ஏற்பட்ட சித்தர் ஆசிர்வாதமும் எனக்கு பரம திருபித்தியை அளித்தது. இங்கே அடியேன் புரிந்து கொண்ட விஷயம் என்னவென்றால் மற்றவர்கள் பார்வைக்கு அவர் திட்டியது மாதிரி அவர் காலையில் இருந்து சும்மா உட்கார்ந்து இருக்கிறான் என்று கூறினார்கள். ஆனால் அதன் பின்பு அடியேனுக்கு கிடைத்த பாக்கியத்தை அவர் மட்டுமே அறிந்து இருந்தார்கள். அதன் பிறகு என் வாழ்கையில் படிப்படியான முன்னேற்றங்கள். என் தங்கைக்கு திருமணம் பழனியில் நடந்தது. எனக்கும் வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது.நான் வாங்கி இருந்த கடனும் பெருமளவு அடைத்து விட்டேன்.இப்பொழுது பழனி சுவாமிகள் மற்றும் பழனி சித்தர் அருளால் நன்றாக இருக்கிறேன். இவை அனைத்தும் அன்று என்னை வழி நடத்திய சற்குரு பழனி சுவாமிகளையும், பழனி சித்தரையும் சேரும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

அனைவரும் அவரை வணங்கி நலம் பெற வேண்டுகிறேன்.
பழனி சித்தரிடம் எனக்கு அருள் பெற்று தந்த அன்பரின் தொலைபேசி எண் : 9442883697 அவர் பெயர் லயன் ராஜேந்திரன். விவரித்த நிகழ்ச்சியை ஞாபக படுத்தவும். 

1. ஓம் அறிவின் சொருபமான சற்குருவே போற்றி
2. ஓம் அன்பிற்கு அழியான சற்குருவே போற்றி
3. ஓம் அண்டமெல்லாம் நிறைந்து இருக்கும் சற்குருவே போற்றி
4. ஓம் அருவமாய் மறைந்து இருக்கும் சற்குருவே போற்றி
5. ஓம் அருளொளியை தந்தருளும் சற்குருவே போற்றி
6. ஓம் அன்னதான தெய்வமான சற்குருவே போற்றி
7. ஓம் அச்சம் தீர்க்க வந்த சற்குருவே போற்றி
8. ஓம் அன்டினோர்க்கு இன்பம் தரும் சற்குருவே போற்றி
9. ஓம் அருட்குருவாய் காட்சி தரும் சற்குருவே போற்றி
10.ஓம் ஆதி முதல்வரான சற்குருவே போற்றி
11.ஓம் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்ஜோதி ஆண்டவரே போற்றி!!   
    போற்றி!!!

எல்லாம் வல்ல சற்குரு ஞான வள்ளல் பழனி மூட்டை சுவாமிகள் மலரடிகள் போற்றி!!போற்றி!! 
அருள்மிகு பழனி சித்தர் மலர் அடிகள் போற்றி!! போற்றி !!!

பிழை இருப்பின் அடியனே மன்னிக்கவும் சற்குரு நாதரே.
இப்படிக்கு,
பழனி மூட்டை சுவாமிகள்,பழனி சித்தர் அடியேன்
சாய்ராம் செல்லப்பன்.
மாலத்தீவு.
facebook link

ஓம் ஷிர்டி சாய் நாதாய நமஹ
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி.

(உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்தமைக்கு நன்றி)