Pages

Ads 468x60px

Saturday, August 25, 2012

படித்ததை உங்களுடன் - 2


மேலுலக ஆத்மாக்கள்



இது A World Beyond என்ற ஆங்கிலப்புத்தத்தின் மொழிபெயர்ப்பு. இந்தப் புத்தகத்தின் எழுதுனர் ரூத் மோன்ட்கோமேரி (Ruth Montgomery) எனும் பெண்மணி. மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் அல்லது தெய்வங்கள் வந்து (கலை வந்து) கதைப்பதைப் போல மேற்கத்தைய உலகில் Automatic Writing என்று அழைக்கப்படும் ஆத்மாக்கள் எங்கள் மூலம் வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதப் பண்ணுவது என்ற ஒரு விடயம் உள்ளது. இப்புத்தகம் அப்படியாகத்தான் எழுதப்பட்டது. ஆர்தர் போர்ட் என்று இந்த எழுதுனருக்கு (Ruth Montgomery க்கு) தகப்பனை போல இருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்ட புத்தகம் இது.

ஆர்தர் போர்ட் பூவுலக வாழ்க்கையின் கடைசிச் சில மாதங்களின் போது அவர் மறுபடியும் புத்தகம் ஒன்று எழுதத்தலைப்பட்டிருந்தார் என்பதை நான் அறிவேன். ஆனால் அது எதைப்பற்றியென்று எனக்குத் தெரியாது. அவர் இறந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களிருக்கையில் அவருக்கும் எனக்கும் தெரிந்த ஒரு நண்பர் வில்லியம். வி. ராஸ்சர் அடிகளார் (Reverend William v. Rauscher) மூலமாக ஆர்தர் தனது புத்தகத்தின் தலைப்பைத் தெரிவு செய்து விட்டார் என அறிந்து கொண்டேன். அந்தத் தலைப்பு என்னவென்றால் 'இறப்பின் பின் நடப்பது என்ன' என்பதாகும். அவரின் ஈமச்சடங்கு முடிந்த சில நாட்களிலேயே (காலை வேளைகளில்) என்னுடைய தட்டச்சு இயந்திரத்தைப் பதினைந்து நிமிடங்களுக்கு அவர் ஆட்கொள்கையில் இறப்பு என்கிற வாயிலின் மறுபக்க வாழ்வு எப்படியிருக்குமென்று விபரித்து நானும் அவரும் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதப்படவேண்டும் என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். அதாவது ஆர்தர் போர்ட் எனும் ஆத்மா ஒரு தீர்மானம் எடுத்தால் அதை நிறைவேற்றியே தீருமென்று காட்டிவிட்டார்.புத்தகம் எழுதத்தொடங்கியதுமே அவர் பலவிதமான ஆத்மாக்களின் குணநலன்களைப் பற்றி விபரிக்கத் தொடங்கினார். பெப்பிரவரி பதினான்காம் திகதியன்று அவர் பின்வருமாறு எழுதினார். "இன்று ஒருவர் உயிருடனிருக்கையில் இறப்பின் பின் என்ன நடக்குமென்பதைப் பற்றி எள்ளளவும் சிந்திக்காதவரும் ஆனால் அதில் நம்பிக்கையோ, நம்பிக்கயின்மையோ கொள்ளாத ஒரு பக்கமும் சாராத, உலகவாழ்க்கையின் இயந்திரத்தன்மையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் இதைப்பற்றி எண்ணுவதற்குக்கூட நேரமில்லாத ஒருவர் இங்கே வரும்போது எப்படிப்பட்ட ஒரு இடத்தைப் பார்ப்பார் என்பதைப் பார்ப்போம். அவர் விட்டுவிட்டு வந்த இடத்தைப் போலவே சிறிது வித்தியாசமான ஒரு இடத்தில் தானிருப்பதாகக் காணுவார். ஒன்றும் பெரிய வித்தியாசமிருக்காது. எல்லாம் தெளிவாகக் கூடுதல் பிரகாசமாக இருக்கும். அத்துடன் ஆகாயமானது மேகங்களில்லாமல் இருக்கும். மறுபடி ஒன்றும் மாற்றமில்லாததால் அவர் அதேயிடத்தில் தான் இன்னும் உயிருடனிருப்பதாகத் தான் எண்ணுவார். எனவே அவர் தனது அன்றாட அலுவல்களைப் பார்க்க நினைத்துத் தனது முதலாவது அப்போயின்மென்ட்டுக்குப் போவார். அங்கே சனக்கூட்டமாகவிருந்தாலும் ஏன் தன்னை ஒருவரும் கவனிக்கவில்லையென்று யோசிப்பார். தான் அவர்களுக்கு ஏதாவது தீங்கு செய்திருப்பேனோவென மூளையைக் குடைந்து பார்ப்பார். அப்படியொன்றும் தோன்றாமல் விழிப்பார். ஒரு சிலர் இவரின் நண்பர்களாகவே இருப்பார்கள். அவர்களுடன் ஒரு மனஸ்தாபமும் இவருக்கிருந்திருக்காது."அவர் பெரிய குழப்பத்துக்காளாவார். பின் இங்கேயிருக்கும் அவரைப் பூவுலகில் நன்கு தெரிந்த ஒருவர் அவருக்கு விடயத்தை விளக்கி ஆறுதலளிக்க வருவார். ஆனால் அவரோ இதென்ன இறந்தவரின் ஆவி தன்முன்னே திடீரென்று தோன்றுகிறது என எண்ணி அஞ்சுவார். வந்தவர், தானும் அவரும் இருவருமே இப்போ ஆவியுலகிலிருப்பதாக விளங்கப்படுத்த அவரோ தான் ஒரு கூடாத கனவு காண்பதாக எண்ணுவார். அவர் தனது வீட்டுக்குத் தனது மனைவியைக் காணச்செல்வார். ஆனால் மனைவியோ சர்ச்சில் கறுப்பு உடை உடுத்திக்கொண்டு உட்காந்திருப்பதைக் காண்பார். அவர் தனது நண்பர்களில் யாரோ இறந்து விட்டார்கள் அது யாராக இருக்கும் (அது தானாக இருக்கக்கூடுமென சற்றும் சந்தேகப்படாமல்) வியப்பார். பின் அவர் முன்னே சென்று யாரென்று அறிவதற்குப் பிரேதப்பெட்டிக்குள் குனிந்து பார்ப்பார். அப்போது தான் முதல் தடவையாகத் தனது உடல் அங்கேயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைவார். இப்படியிருக்காது, இப்படியிருக்காது எனத்தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், அவருடன் கூட வேலை செய்பவர்கள் அனைவரும் அவரது மரணத்தைப்பற்றித் (தான் அவர்களுக்கு அருகே நின்று தொண்டைத்தண்ணீர் வற்றக் கத்திக் கொண்டிருக்கும் போது) கவலைப்பட்டுக் கதைத்துக் கொண்டிருப்பார்கள். இப்போ அவரது நிலை உனக்கு விளங்குமென நினைக்கிறேன். சிறிது சிறிதாக அவருக்குத் தான் தான் சிக்கலில் மாட்டி விட்டது புரியத்தொடங்கும். தான் கதைப்பதை அவர்களுக்கு விளங்கப்பண்ணாவிட்டால் தன்னை உயிருடன் புதைத்து விடுவார்களென்று அஞ்சுவார். தான் கதைப்பது அவருக்குத் (தனக்குத்) தெளிவாகக் கேட்கும். ஆவியுலகிலிருக்கும் அவரது உறவினர் சொல்வதையும் ஏற்றுக்கொள்ள இயலாமல் தான் உயிருடன் புதைக்கப்படப்போகிறேனோ என வருந்துவார்."இது உதாரணத்துக்குச் சொல்லப்பட்ட ஒரு காட்சி. இதைப்போல சிலர் ரொம்பக் கஷ்டப்படுவார்கள். இறந்தபின் ஆத்மாவுக்கு என்ன நடக்கிறது என்பதைப்பற்றிச் சற்றும் சிந்திக்காமல் இருப்பவர்கள் கிட்டத்தட்ட இந்த நிலையில் தான் வருவார்கள். மூக்கைப்பிடித்தால் வாயைத் திறக்கத் திரியாதவர்கள் போல்தான் இவரின் நிலை. அவருக்கு உண்மையை விளங்கப்படுத்த நீ...................ண்ட நாட்கள் எடுக்கும். (அதாவது அவர் நிரந்தரமானவர்; ஆத்மா வடிவில் உயிர் வாழ்வார்; பூதவுடல் மட்டும் தான் அழிந்தது என்பதை விளக்குவதற்கு). அவரது விதவை மனைவியின் துயரத்திலும் பார்க்க அவரின் துயரம் மிகக்கூடுதலாக இருக்கும். அவரது மனைவி அவரை ஒரு நாள் சந்திப்போமென ஆறுதல்படுவாள். ஆனால் அவரோ நடந்தது நிஜமல்ல என நினைப்பார்.மறுநாள் போர்ட் பின்வரும் விதமாகத் தொடங்கினார், "இப்போ வேறொரு விதமான மனிதரைப் பார்ப்போம். அவர் சொர்க்கபுரியில் நம்பிக்கை வைத்தவர். தேவகுமாரர்களும் தேவதைகளும் யாழ்வாசித்துக் கொண்டிருக்கும் பளிங்காலான மாடமாளிகைகள், கூடகோபுரங்களுடன் கூடிய சொர்க்கபுரியில் ஒரு உயரமான சிம்மாசனத்தில் ஆண்டவன் அமர்ந்து இரவுபகலாக மகிழ்ச்சியான ஆத்மாக்களைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்பவை போன்ற கற்பனையிலுள்ளவர். இப்படியான மனநிலையில் தான் அமெரிக்கா மற்றும் ஏனைய இடங்களிலுள்ள சிறிய கிராமங்களைச் சேர்ந்த சர்ச்சை அண்டிவாழும் குறுகிய மனப்பான்மை கொண்ட பலர் உள்ளனர். ஆனால் உண்மை அப்படியல்ல. இங்கே வரும் ஆத்மாக்கள் பளிங்காலான மாடமாளிகைகளை விரும்பின் அவர் அப்படிப்பட்ட இடத்திலிருப்பார். ஏனெனில் அப்படிப்பட்ட கட்டடங்கள் பூவுலகில் இருக்கின்றன. அத்துடன் ஆத்மாக்களுக்குத் தாங்கள் நினைக்கும் இடத்தில் நிற்கக்கூடிய சக்தி வந்துவிடும். ஆனால் தேவதைகளையும் தேவகுமாரர்களையும் சிறகுகளுடன் தோற்றுவிப்பது கஷ்டம். அப்படி அவர்கள் இருக்கும் பட்சத்தில் நான் இப்போ இருக்கும் இடத்தில் காணவில்லை என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஆனால் இங்கே பல ஆத்மாக்கள் ஒளி வடிவங்களாக உள்ளன. நல்ல ஆத்மாக்கள் ஒளி ரூபமாக இருக்கின்றன. ஆனால் நாம் சிறகுகளுடன் இருக்கவேண்டுமென்று நினைக்கவில்லை. நாம் எங்கேயாவது போக நினைத்தால் அந்த நினைப்புத்தான் எம்மை அந்த இடத்துக்குக் கொண்டு சேர்க்கும். சிறகுகளல்ல. அத்துடன் பூவுலகிலிருக்கும் எல்லாச்சடப்பொருட்களும் எண்ண வடிவங்கள் என்பதால், நாம் அவற்றினூடே செல்லமுடிகிறது.மற்றொரு நாள் அவர் பின்வருமாறு எழுதினார், "நான் இன்று உனக்கு இங்கேயிருக்கும் இன்னொரு இடத்தைப்பற்றிச் சொல்லப்போகிறேன். இதை ஒரு தங்குமடமென்று சொல்லலாம். சிலர் இங்கே மிக நீண்ட காலங்கள் தங்கியிருப்பார்கள். ஆத்மீக உலகில் அவர்களின் வளர்ச்சிக்குரிய விழிப்புணர்ச்சியை எதுவாகிலும் உணர்த்தும் வரை. கத்தோலிக்கர்கள் இதனைப் 'பேர்கேட்டறி' (Purgatory) என அழைப்பார்கள். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமானது. எல்லோரும் அங்கே சில காலம் தங்கியிருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அப்படியல்ல. இந்த இடைப்பட்ட நிலையிலிருக்கும் ஆத்மாக்களுக்காகக் கத்தோலிக்கர்கள் ஆண்டவனைப் பிரார்த்திப்பார்கள். உண்மையில் அங்கே பிரார்த்திப்பது இங்கே எமக்கு நன்மையைச் செய்கிறது. அந்தப் பிரார்த்தனைகளால் உருவாக்கப்படும் அன்பு உணர்வலைகளை எங்களால் நிச்சயமாக உணரமுடிகிறது. இறப்பின்பின் வரும் இந்த உடனடி நிலையானது ஆத்மா இரு உலகங்களுக்கிடையில் இருக்கும் நிலையைக் குறிக்கும். கிட்டத்தட்டத் திரிசங்கு சொர்க்கம் போன்ற நிலையென்று சொல்லலாம். இது கெட்ட ஆத்மாக்களுக்கு மட்டுமுரிய நிலையல்ல. கூடுதலாக உலகமாயையில் முழுவதும் ஆழ்ந்து எந்த ஒரு ஆயத்தமும் (ஆத்மீகமாக) இல்லாத ஆத்மாக்களுக்கும், தங்களது மேலுலக வாழ்வைத் தொடர விருப்பமில்லாதவர்களுக்குமான நிலையாகும். அவர்கள் ஒன்றில் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்து விடுவார்கள் அல்லது ஒருவிதமான இயக்கமுமில்லாமல் திரிவார்கள். அவர்கள் முன்னேறுவதற்கு ஒருவிதமான முயற்சியுமெடுக்க மாட்டார்கள். ஒன்றையும் அறிவதற்கு முயலமாட்டார்கள். அவர்கள் தங்களது உடலை நிரந்தரமானது, அழிவில்லாதது என எண்ணியிருந்ததால், அந்த உடலை விட்டுப் பிரிந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட முயலாமலிருப்பார்கள்.அப்படிப்பட்ட ஆத்மாக்களைப் பற்றி ஆர்தர் விபரிக்கையில், 'அங்குமில்லாமல், இங்குமில்லாமல் இடைப்பட்ட நிலையில் நீண்டநெடு நாட்கள் மகிழ்ச்சியின்றி, மனஉளைச்சலுடன்' திரிந்து கொண்டிருப்பார்கள் எனவும், தங்களது ஆத்மஈடேற்றத்துக்குத் தாங்களே முட்டுக்கட்டையாக இருப்பதாக உணரும் வரை அப்படியே இருப்பார்களெனவும் சொன்னார். தாமாக ஏதாவது முயற்சி எடுக்கும் வரை எவரும் எதுவும் செய்யஇயலாது என அப்போது உணருவார்கள். அப்போது தான் உண்மையில் விழிப்புற்றவராவர். அவர்கள் அதை உணர்ந்தவுடன் அவர்களுக்கு உதவுவதற்கு அநேக சந்தோஷமான ஆத்மாக்கள் தயாராக இருக்கும். அவை அவரைத் தடைகளைக் கடக்க உதவி வழிநடத்தும். ஆர்தர் மேலும் தொடர்கையில், "சாதாரணமாக ஆத்மா உலகிற்குப் புதிதாக வரும் ஆத்மாக்களை முதலில் அவர்களது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், கூடப்படித்தவர்கள் போன்றோர் வரவேற்பார்கள். இதனால், அந்த நேரத்தில் தங்களது நைந்துபோன உடல் நழுவிப்போக மீண்டும் யௌவனப்பருவமடைவதனால் உண்டாகும் மனஅழுத்தத்தை ஒருதரத்திலேயே உணரக்கூடியதாக உள்ளது. நாம் எந்தவயதில் இறப்பைத் தழுவியிருப்பினும் இங்கே நாம் இளமையாகவே இருப்போம். குழந்தைகளும் கூடப் பொறுப்பான வழிநடத்தலின் காரணமாகக் கூடிய விரைவில் வளர்ச்சியடைந்து விடுவார்கள். ஏனென்றால் ஆத்மாக்கள் எல்லாமே படைப்பின் ஆதியிலே தோன்றியவையே. எனவே இங்கே வயதான ஆசிரியர்களோ, கெடுபிடியான பெற்றோர்களோ இருந்து மற்றைய ஆத்மாக்கைக் கட்டுப்படுத்த மாட்டார்கள். இங்கே நீ நம்புகிறாயோ இல்லையோ ஒரு சந்தோஷமான, வரவேற்கத்தக்க சூழ்நிலையே நிலவுகிறது."ஆரம்பமுகமன்கள் நிறைவு பெற்றதும் ஆத்மாக்களுக்கு இங்கே எப்படிப் பிரயாணம் செய்வது, எப்படி ஒருவர் மற்றையவருடன் கதைப்பது (தொடர்பு கொள்வது) அது சம்பந்தமான வழிமுறைகள் என்பன விளங்கப்படுத்தப்படும். உண்மையில் அவர்கள் மனத்தால் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருப்பார்கள் ஆதலால், பெரிய விளக்கங்கள் தேவையில்லை. பூவுலகில் சுவாசிப்பது எவ்வளவு இயற்கையானதோ அதை விடவும் இங்கே இம்முறைகள் இயற்கையானது. பூவுலகவாசிகளுக்குச் சுவாசிக்கச் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. அதேபோலத்தான் இங்கேயுள்ளவர்களுக்கு (ஒருவர் மற்றையவருடன் எண்ணங்களின் மூலம் தொடர்பு கொள்வதும், நாம் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தில் இருப்போமென்பதும்).ஆத்மாக்கள் தமது நிலையை உணர்ந்து, சந்தேகங்களைக் கேட்க வெளிக்கிடுகையில் தனது முந்தைய பிறவிகளின் ஞாபகங்களும் (முக்கியமாகக் கடைசியாக முடிந்த பிறவியின் ஞாபகங்கள்) வரத்தொடங்கும். தான் இப்போ முடித்து வந்த பிறவியில் நிறைவேற்ற என எடுத்துக் கொண்டவற்றில் ஏன் சிலவற்றைச் சரிவர முடிக்க முடியாமற் போனோமென வியப்பார். எந்தெந்த இடத்திற் பிழைகள் விட்டோமென எண்ணிப்பார்ப்பார். பிறவியெடுக்கும் போது என்னென்ன நிறைவேற்ற வேண்டுமென்று பிறவி எடுத்தோமோ அது தனது ஆழ்மனதுக்குத் தெரிந்தேயிருக்க ஏன் தனது வெளிமனதுக்கு மட்டும் மறந்து போனது என வியப்பார்."இப்போ தெருவில் காரடிபட்டு இறந்த ஒரு குழந்தையின் ஆத்மாவைப் பற்றிப் பார்ப்போம். அந்தக் குழந்தை இந்தப் பிறவியில் ஒரு பாவமும் அறியாதது. எனவே ஏன் அந்தப் பச்சிளம் குழந்தைக்கு அப்படி நடந்ததென்று ஒருவருக்கும் விளங்காது. ஆனால் கொஞ்சம் பொறு! அந்தக் குழந்தையின் ஆத்மாவும், அதன் பெற்றோரினதோ அல்லது தாத்தா, பாட்டியினதோ ஆத்மாக்களைப்போல ஒரே வயதுடையதாக இருக்கும். அதுவும் தனது முன்னைய பிறவிகளில் செய்த தவறுகளால் ஆத்மாவைக் களங்கப்படுத்தியிருக்கும். அந்தக் கடனை அது அடைக்க வேண்டாமா? தற்செயலான நடவடிக்கையென்பது ஒன்றுமில்லை. ஏனென்றால் இங்கே போடப்படும் திட்டமானது என்றும் எல்லாவற்றையுமே சரியாக நடைபெறச் செய்யும். ஆனால் படுபயங்கரமான கெட்டதன்மையானது கெட்டமனிதனின் மனதில் வெகு சீக்கிரமாக வளர்ந்து, சில விடயங்களை அங்கே நிறைவேற்ற என்று, ஆரம்பத்திலே இங்கிருந்து போடப்பட்ட திட்டத்தை மீறச்செய்கிறது. ஹிட்லரின் விடயத்தைப் பார்த்தோமென்றால் பிறக்கும் போது தான் ஒரு ஓவியனாய்த் தனது ஆத்மாவின் கலையார்வத்தை நிறைவேற்ற வேண்டுமென்று திட்டமிட்டுப் பிறந்தாலும் ஜெர்மன் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியதும், காலகாலமாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஆத்மாவின் மனதிலே சேமிக்கப்பட்டிருந்த கெட்டதன்மைகள் அனைத்தும் விஸ்வரூபமெடுத்து அவனை ஒரு அரக்கனாக மாற்றி விட்டது."வேறொரு முறை ஆர்தர், இறப்பின் பின் என்ன எதிர்பார்க்கலாம் என்று தெரிந்து கொண்டவர்கள், தாங்கள் தங்களது பூதவுடலை நீத்து ஆத்மா உலகுக்குப் பயணமாவதை முழு உணர்வோடு செய்பவர்களுக்கு என்ன நடக்குமென்பதைப் பற்றி விளக்கினார். அவர்கள் தங்கள் பூதவுடலை விட்டு விட்டதையும் தங்களது உறவினர்கள் தங்களைப் பார்க்க இயலாதென்பதையும் உணர்ந்து கொள்வார்கள். தங்களது மரணச்சடங்குகளைப் பார்க்கப் போவார்கள் (இறுதியாகத் தங்களது உடலுக்கு வணக்கம் செய்ய). அதன்பின்னர் உறவினர்களால் தீவிரமாகத் தேடப்படாவிட்டால், பாசவலைகளால் பின்னியிழுக்கப்படாமல் சுதந்திரமாகத் தங்களது மேலுலகப் பணிகளைச் செய்யமுனைவார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் இங்கே உண்மையாக முன்னேற்றம் காண்பார்கள். அவர்கள் தங்களை எண்ணங்களாலும் கருத்துகளாலும் உடுத்திக்கொள்வார்கள். முன்னேற்றப்பாதையில் போவதற்கான வழிமுறைகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் நிச்சயமாக முன்னேற்றப்பாதையில் சென்று இறைவனுடன் இரண்டறக்கலப்பார்கள். தொடக்கத்தில் அவர்கள் பாடசாலைக்குச் செல்வார்கள். அங்கே ஆசிரியர்கள் சில சமயங்களில் ஆத்மாக்களின் காலடியிலும், சில சமயங்களில் அவர்களுக்கு மேலே மிதந்தும் பாடங்களை நடத்துவார்கள். ஆனால் அவர்களும் பூவுலகில் ஆத்மாக்களுக்கறிந்த சடப்பொருட்கள் போலவே உண்மையான ரூபத்துடன் இருப்பார்கள்."அந்த ஆசிரியர்கள் அடிப்படையறிவுகளையும், கீழைத்தேயநாடுகளின் தத்துவங்களையும், மற்றும் புதிய சமயங்களான கிறிஸ்துவம், இஸ்லாம் போன்றவற்றையும் பற்றி விளங்கப்படுத்துவார்கள். இவற்றையெல்லாம் உணர்ந்தபின் அவர்கள் சிறப்புக்கல்வி (யேசுபிரான் பூவுலகில் பிறக்கும் போது அறிந்திருந்த மாதிரியான) கற்பிக்கப்படுவார்கள். அவர்கள் இறைவன் சந்நிதானத்தில் உழைக்கமட்டும் செய்யவில்லை பேரானந்தத்தையடையும் பாதையில் ஸ்திரமாகக்கால்களைப் பதித்துச் செல்வார்கள். அவர்கள் உண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களென அறியப்படுவார்கள். அவர்கள் இவ்வுலகில் கண்விழிக்கையில் தங்களது கடந்து போன பிறவிகளின் தன்மைகளையும் இனி எடுக்கப்போகும் பிறவிகளின் தன்மைகளையும் முழுவதுமாக உணர்ந்தேயிருப்பார்கள். இவர்கள் கூர்மையான நினைவுத்திறனுள்ளவர்கள். அவர்கள் பிறவிகளின் இடையே இங்கே அறியப்படுகின்ற ஆத்மீக அறிவுகளைப் பூவுலக வாழ்க்கையின் போது பறிகொடுக்காமல் காப்பாற்றுவார்கள். உதாரணத்துக்கு நாம் இங்கே முன்னேறுவதற்குரிய சிறந்த வழியானது அன்பு செலுத்துவதாகும் என்று அறிவோம். வேறொரு ஆத்மாவுக்குத் தீங்கு நினைத்தால் அந்த நினைப்பே இங்கு எமது முன்னேற்றத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். அந்த நினைப்பே (அந்த நினைப்பால் எழுந்த கறையைப் போக்குவதற்குச்) சில சமயம் எமக்குப் பல பிறவிகளெடுக்க வழிகோலும். தீயனவற்றை உரைக்காதே. தீயனவற்றை நினைக்காதே. நாம் உண்டாக்குவதைத் தவிர வேறு பாவங்களில்லை. ஏனென்றால் இங்கே சாத்தான் இருப்பதற்கான ஒரு அடையாளமும் இல்லை. எமது எண்ணங்களாலும் நடவடிக்கைகளாலும் நாம் தான் சாத்தானை உருவாக்குகிறோம்.நான் 'சாத்தான்' என்ற கருத்தை விளக்குமாறு கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார். "மனிதகுலத்தால் ஆரம்பத்திலேயே அறியப்பட்டதும், ஆனால் உலகாதய ஆசாபாசங்களால் மறக்கடிக்கப்பட்டதுமான காலகாலமாக இருந்து கொண்டிருக்கும் ஞானமானது எமக்கு இங்கே கற்பிக்கப்படும். நாம் ஆசாபாசங்கள், வெறுப்புகள், காமம் போன்றவற்றை விலத்துவதன் மூலம் பௌதீகவுலகின் தங்குதடைகளை உயிரோடிருக்கையிலேயே வெற்றிகொள்ளலாம் என்பதை நாம் அறிவோம். உலகாதய மாயையில் நாம் ஆழ்ந்து போவதற்குக் காரணம் நம் உள்ளத்தே தூண்டுவிக்கப்படும் ஆசை அபிலாஷைகளே. அப்படித் தூண்டுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசை அபிலாஷைகளை வெற்றிகொள்வதே உயர்நிலையை எய்துவதற்குரிய விரைவான வழியாகும். முடியற்ற வாழ்வின் ஒரு மின்னலான கணமே இந்தப் பூவுலக வாழ்வென்பதைப் புரிந்துகொண்டால் இந்த ஆசாபாசங்களை வெற்றி கொள்வது இலகுவாகும். அந்த மின்னலான கணப்பொழுதில் (பூவுலகில்) தூண்டுவிக்கப்படும் ஆசைகளுக்காக ஏன் ஒருவரின் முன்னேற்றங்களைத் தடுக்க வேண்டும்? இந்தச் சிந்தனையை என்றும் மனதில் வைத்திருக்க வேண்டும். மனிதனைச் சூழ்ந்து நின்று ஆசை வேட்கைகளால் அவனைத் தன்னைப் படைத்தவனையே மறக்கடிக்கச் செய்யும் இந்தத் தீய சக்திகளை வெல்வது மிக மிக முக்கியமானது."இந்தத் தீயசக்திகளானவை சில சமயம் பரப்புபவர்களால் சொல்லப்படுவது போல சைத்தானின் வேலையல்ல. ஆனால் கெட்ட எண்ணங்களைச் சிலர் எண்ணுவதால் சூழலில் நிலையாக ஏற்படுத்தப்படும் தீயஅலைகளாகும். நிலையான கறைகளாகும். 'நிலையான' என்று சொல்வது சிலவேளை உண்மையில்லாமல் இருக்கலாம். ஏனென்றால் பலர் நல்ல எண்ணங்களை எண்ணுவதால் உண்டாக்கப்படும் நல்ல அலைகள் இந்தத் தீய அலைகளின் சக்திகளை நிர்மூலமாக்கும். சைத்தான் என்பது நாம் நினைப்பது போல இல்லை. மனிதனானவன் இப்பூவுலகில் கால் வைத்ததில் இருந்து சேர்க்கப்பட்டிருக்கும் தீயசக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்ததே இந்தச் சைத்தான் ஆகும். அது தீய்மைகளின் விளைவேயாகும். மனிதனால் கர்த்தர் போல இருக்க இயலாததால், ஒவ்வொரு சமுதாயமும் அதனது தீயசெயல்களால் இந்தத் தீயசக்திக்கு உரம் போட்டு அதன்மூலம் உருவான அந்தத் தீயசக்தியே நாம் சைத்தானென நினைப்பதாகும். எவ்வாறு ஒவ்வொரு கருணையான, நன்மையான செயல்களாலும் நல்ல சக்தியானது பிரகாசிக்கிறதோ, அவ்வாறே இந்தத் தீயசக்தி ஒவ்வொரு தீயசெய்கைகளாலும் உரமூட்டப்பட்டு மிகச்சக்திவாய்ந்த விசையாக உள்ளது. அதுதான் சைத்தான். அது ஒரு ஆளல்ல. ஆரம்பத்தில் ஒரு சொல்லிருந்தது. அது நல்ல சொல்லாக இருந்தது. அது 'கடவுள்' என்னும் சொல்லாகும். ஆத்மாக்களுக்காக இவ்வுலகினைப் படைத்த தந்தையானவன் தீயசக்திகளைக் கலக்கவில்லை. ஆனால் வழிதவறிய ஆத்மாக்கள் பௌதீக உடலெடுத்துத் தங்களது சொந்த முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காகப் பேராசைப்பட்டுச் சண்டைசச்சரவுகளிலீடுபட்டு அதனால் உருவாக்கப்பட்ட தீயசக்திகளின் மொத்த உருவை அவர்கள் சைத்தானென அழைத்தார்கள். சைத்தானைக் கடவுள் படைக்கவில்லை. மனிதன் தான் படைத்தான். அது ஒரு கெட்ட ஆத்மாவல்ல. ஆனால் மனிதனின் கீழ்த்தரமான குணங்களினால் உண்டாக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பு. அதற்கு எமது கீழான எண்ணங்களினாலும், செயல்களினாலும் உயிரூட்டிக்கொண்டிருக்கிறோம். எண்ணங்களும் செயல்களேயாகும் என்பதனை நாம் உணரவேண்டும். ஒவ்வொரு கெட்ட சிந்தனையும், செயலும் அன்பான, கருணையான சிந்தனையாலும், செயலாலும் இடமாற்றப்பட்டால் சைத்தானின் வடிவம் சிறுத்துக்கொண்டே வரும். சைத்தானை அழிக்க வேண்டுமென்றால் நாம் இதனை உணரவேண்டும். எனவே நாம் எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த இரண்டாயிரமாம் ஆண்டை அண்மிக்கையில், பூவுலகில் வாழும் அனைவரது இதயங்களிலும் கெட்ட எண்ணங்களுக்குப் பதிலாக நல்ல எண்ணங்களே நிரம்பியிருக்கும். பூவுலகில் மட்டுமல்ல நாம் இப்போ செய்வது போல ஆத்ம உலகிலும் நல்லனவே நிரம்பியிருக்கும்."விலங்குகளுக்கும்கூட இறப்பில்லையா என அறியவிரும்பினேன். அதற்கு ஆர்தர் பின்வருமாறு பதிலளித்தார்: "இங்கே நேரம் என்பதற்கு அர்த்தமில்லை. எங்களுக்கு வயதில்லை. நாம் ஆரம்பத்திலிருந்தே இருந்துகொண்டிருக்கிறோம். எமக்கு முடிவில்லை. நாம் இங்கே இருப்பதே நேரம் என்பதனை விளக்கப்போதுமானது. இந்த உண்மையைச் சரிவர விளங்கிக்கொள்வோமெனில் ஏன் வீணான விஷயமென்று ஒன்றுமில்லையெனப் புரிந்து கொள்ளமுடியும். ஒன்றுமே இறப்பதில்லை. மீண்டும் அதனை அழுத்திச் சொல்கிறேன். ஒன்றுமே இறப்பதில்லை. இறப்பு என்று ஒன்றுமே இல்லை. படைப்பின் ஆரம்பத்திலிருந்தே எல்லாம் இருந்துகொண்டே இருக்கின்றன. எவையும் அழிவதில்லை. ஆனால் அவைகளின் நிலைகள் மாறுதலடையும். ஒரு கூண்டுப்புழு வண்ணாத்துப்பூச்சியாய் மாறி அதனது ஆத்மா வேறொரு வடிவமெடுத்தவுடன் அதனுடல் மீண்டும் அதனது மூலப்பொருள்களுக்கு மாறும். ஆத்மா என்றும் மாறாது. அநாதியானது. ஆனால் அதன் நிலைகள் மாறுதலடையும். பௌதீக உலகில் எமது கையாலடிபடும் ஈயானது வேறொரு உலகில் நிலை மாற்றமடையும். ஆனால் ஈயான அதனது தன்மையானது மாறாது.காரிலடிபட்டு இறக்கும் நாயின் நிலையும் இதேதான். அதனது பூதவுடல் பூமிக்குச் சென்றடையும். அதனது ஆத்மா ஏனைய ஆத்மாக்களைப்போலவே அழிவில்லாததாகையால் மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கும். இது ஒரு மாறாத நியதியாகும். நாம் ஆரம்பத்தில் இருந்தது போலவே என்றும் இருப்போம். ஆனால் ஆத்மீக வழிகளில் முன்னேறிக்கொண்டு இருப்போம். சில நேரங்களில் ஒரு உண்மையான செல்லப்பிராணி (நாய்போல) பூவுலகில் மிக மிக முன்னேறினால், அது மீண்டும் பூவுலகிற்குத் திரும்ப வேண்டியிருக்காது. ஆனால் மேலுலகிலும் அது நாயாகவேயிருக்கும். தனது முழு வாழ்க்கையையும் மற்றவருக்கு உதவக்கூடியதாகவும், அவர்களைக் காப்பாற்றக் கூடியதாகவும் முழுமையாக அர்ப்பணிக்கக் கூடியதான ஒரு அன்பான ஆத்மாவாக இருப்பதிலும் பார்க்க உயர்வான நிலை தான் வேறு என்ன? தன்னலம் கருதாது எப்போதும் எஜமானனின் நலனை முன்னே வைத்ததனால் அந்த நாயானது கடவுளின் பார்வையில் பூரணமாகிவிட்டது. எங்கள் எல்லோருக்கும் எவ்வளவு சிறந்த உதாரணமென்று பார்த்தாயா? நாமும் எப்பொழுதும் எம்முடைய நலனைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் ஏனையோரின் நலனைப் பற்றியும் கருத்தில் கொண்டோமாயின் பூரணமானவர்கள் ஆவோம். நாம் எந்த விதமான பிறவியெடுத்திருந்தாலும் எங்கள் நலனிலும் பார்க்க மற்றையோரின் நலனைக் கருத்தில் கொண்டால் முன்னேறலாம்."அவர் தொடர்ந்து எழுதுகையில், "நாய்களோ, பூனைகளோ அல்லது வேறு எந்த வகையான செல்லப்பிராணிகளோ சில மாறுபட்ட குணாதிசயங்களைக் காட்டும். சில விரும்பத்தக்கதாக இருக்கலாம், சில விரும்பத்தகாததாகவும் இருக்கலாம். விலங்குகள், தாவரங்கள், கனிமங்கள், பறவைகள் போன்றவற்றின் ஆத்மாவானது மனிதர்களின் ஆத்மாவிலும் பார்க்க வித்தியாசமான இறைசக்தியாகும். ஒரு அணுவானது உடைந்து சிற்றணுக்களாக மாறுவதைப்போல் அவை ஆத்மாவின் பகுதிகளாகப் பிரிந்து முழுமையில்லாத பகுதி ஆத்மாக்களாக, சிற்சில விடயங்களை மட்டும் நிறைவேற்றும், முழுமையான மனித ஆத்மாவாக மாறக்கூடிய வல்லமையை இழந்தவைகளாகச் செயற்படும். இந்த மரங்கள், பறவைகள், பாறைகள், மிருகங்கள், காட்டுவிலங்குகள், மண் போன்ற எல்லாவகையான உயிரினங்களுக்கும் ஒரு தனித்தன்மையும், ஆத்மாவுமுள்ளன. ஆனால் அவை பூவுலகில் வாழும் மனிதனின் ஆத்மாவைவிட முற்றிலும் வேறுபட்டவை. இவையும் சுவாசிக்கும், உயிர்வாழும் பிறவிகளாகும். இவையும் கடவுளின் ஒரு பகுதியேயாகும். அவை பூவுலகில் வாழும் மனிதனின் ஆத்மாவைப் போல் மிக முன்னேற்றமடையாவிடினும், எம்மைப் படைத்தவனையே என்றும் பிரதிபலிப்பனவாகும். அதாவது மனிதர்களாகிய நாம் எப்படி அன்புக்குக் கட்டுப்படுகிறோமோ அவையும் அதே போலவே கட்டுப்படும். அவற்றுக்கு வேறுபட்ட விருப்பு வெறுப்புகளிருக்கும். அவற்றின் விளையாட்டுத் தனங்களும், கோபதாபங்களும் வேறுபட்டவை. அவை தங்களுக்கென்று அமைந்த செயற்பாடுகைச் செய்து ஒன்றில் நல்லவையாகவோ, கேட்டவையாகவோ அவைகளுக்கென்று அமைந்த தனிப்பட்ட குணநலன்களின்படி வரும். அந்தத் தனிப்பட்ட தன்மைகள் ஆத்மாவின் தன்மைகளாகும். அதனால் தான் சில வளரும் தாவரங்கள் பிரார்த்தனைக்குப் பதிலளிப்பதாகத் தெரியும், சில என்னதான் அன்புடன் பராமரித்தாலும் ஒத்துழைக்கமாட்டா. சில மனிதர்களும் அவ்வாறே நடப்பதைக் கண்டிருப்பாயென்று நினைக்கிறேன். சிலர் சற்றும் ஏனையவர்களைப் பற்றிச் சிந்திக்காமல், கடமைகளை மறந்து திரிவார்கள். சிலர் மற்றையவர்களின் நிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவார்கள். மற்றையவர்களை சந்தோஷப்படுத்துவார்கள்."இங்கே ஞானாலயத்தில் பிரார்த்தனையின் பலனால் ஏனைய உயிரினங்கள் பெறும் சக்தியைப்பற்றி அறிகிறோம். அவை உடலுபாதைகளை மாற்றும் சிகிச்சையாகவும் இருக்கலாம் அல்லது ஆத்மீக முன்னேற்றத்துக்குரிய முயற்சிகளாயும் இருக்கலாம். தாவரங்கள், பிராணிகள், கற்பாறைகள். பூச்சிபுழுக்கள் போன்ற எம்மால் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய, உணரக்கூடிய, சுவைக்கக்கூடிய எல்லாப்பொருட்களும் பிரார்த்தனைக்குப் பதிலளிக்ககூடியன என நாமறிகிறோம். எல்லாம்வல்ல இறைவன் தனது படைப்புகளில் நிறைந்திருப்பதோடு அவைகளின் முன்னேற்றத்துக்கான உண்மையான பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்க்கிறான். மரங்களிடையே உலவும் காற்றின் ஒலியும், பறவைகளின் ஒலியும், பூச்சியினங்களின் ஒலியும், மனிதனின் கூக்குரலும் இறைவனுக்கு ஒரேவிதமாகவே கேட்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொருவிதமாக இறைவனுடன் தொடர்புகொள்ளும். இறைவன் ஒவ்வொரு முனகல்கள், ரீங்காரங்கள், கூக்குரல்கள் போன்ற எல்லாவிதமான தொடர்பு சாதனங்களுக்கும் (அது கடவுளுடனோ அல்லது ஒன்றுடனொன்றோ) செவிசாய்ப்பார். இதை ஒரு கற்பனை கலந்த பாப்பாக்கதையென்று எண்ணிவிடாதே. இந்த விஷயங்களெல்லாம் உண்மையே ருத். நாம் எல்லா உயிரினங்களுடனும் (அவை ஆத்மவடிவிலோ அல்லது பௌதீக வடிவிலோ) தொடர்பு கொள்ளக்கூடியதாக வரும் வரையிலும் நாம் கடவுளுடன் இரண்டறக் கலக்கக்கூடிய நிலையை அடையமாட்டோம். உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதனை எண்ணிப்பார். பாறைகள், மரங்கள், கற்கள் போன்றவற்றின் குரல்களையும் பூச்சியினங்களினது ரீங்காரங்களையும் அதேபோல எல்லாவகையான உயிர்வகையினதும் ஒலிகளையும் செவிமடுக்கக் கற்றுக்கொள். எம்மெல்லோரையும் ஒன்றிணைப்பதான, எம்மொவ்வோருவரையும் கடவுளின் தோற்றங்களாக்குவதுமான அந்த இணைப்பின் மூலம் அவற்றின் ரகசியங்களை அறி. நாம் சடப்பொருட்களென்று சொல்பவையெல்லாம் எம்மைப்போன்றவையே. ஒவ்வொன்றுக்கும் அதனதன் வழியில் உயிர்வாழ்கைக்களுள்ளன. கற்பாறைகளும், பறவைகள், வண்டினங்கள், மனிதர்களைப்போல் இறைவனின் மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியே. ஒவ்வொரு உயிரினத்துக்கும் இறைவனின் மாபெரும் திட்டத்தில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.மிகப்பெரிய குழப்பத்துடன் நான் "அபாயகரமான பூச்சியினங்களை அழிக்கலாமா எனக்கேட்டேன். அதற்கு அவர், "பூச்சி புழுக்களானவை தங்களுக்கென்று வகுக்கப்பட்ட இடத்திலிருந்து விலகி வந்தால் அவை மனிதனால் அழிக்கப்படுவார்கள். எல்லா உயிரினத்துக்கும் இப்பூவுலகில் இடம் வேண்டும். டைனசோர் வகையைச் சேர்ந்த பிரம்மாண்டமான விலங்குகள் ஏனைய விலங்குகள், பறவைகள், மனிதரினிடங்களை அபகரிக்கப்பார்த்தமையால் பூமியின் பரப்பிலிருந்து அவை மறைந்து விட்டன. இந்த நடவடிக்கையானது மனிதனுக்கு ஒரு பாடமாக அமையட்டும். மனிதனும் பல்கிப்பெருகி, அழிவுப்பாதையில் சென்று ஏனைய உயிரினங்களின் அழிவுக்கும் காரணமானான் என்றால் மனிதகுலமும் அழியவேண்டிவரும். நீ குறிப்பிட்ட இந்தப் பூச்சியினங்களும் பல்கிப்பெருகி மனிதனுக்கும் மற்றைய விலங்குகளுக்கும் பயமுறுத்தலாக அமைந்தால் அவைகளும் அழியவேண்டியவையே. இந்தப்பௌதீகவுலகில் எமக்கென்று உள்ள இடத்தை மீறி நாம் அமைதியைக் குலைப்போமாயின் நாம் பௌதீக உலகிலிருந்து நீக்கப்படுவோம். ஆனால் உண்மையில் ஒன்றுமே எப்போதும் அழிவதில்லை. பூச்சிபுழுக்களையும், டைனசோர்களையும் மனிதனுடன் ஒப்பிட்டமையை வியந்தேன்: மனிதன் உலகைக் குப்பைமேடாக்குபவனே. இருபதாம்நூற்றாண்டைச் சேர்ந்த மனிதனானவன் நீரோடை, ஏரி, குளங்களை அசுத்தமாக்குகிறான். தூய்மையாக இருந்த காற்றை அசுத்தப்படுத்திவிட்டான். கனிப்பொருள் நிறைந்த மண்ணை ஆயிரக்கணக்கான ஏக்கராகக் காங்கிரீட்டைப் பாவி மூடிவிட்டான். காடுகளை அழித்துவிட்டான். இவற்றின் மூலம் பழைய அழிந்துபோன விலங்குகள் போல் நாமும் எமது அழிவை எழுதிச்செல்கிறோமா?

நன்றி - Aanmigakkadal

0 comments:

Post a Comment