Pages

Ads 468x60px

Monday, March 18, 2013

பயணித்ததை உங்களுடன் - மணிகர்ணிகா

மணிகர்ணிகா படித்துறை

மணிகர்ணிகா கட்டம் முக்கிய படித்துறை. ஆதிசங்கரர்  எழுதிய மணிகர்னிகாஷ்டகத்தில் மணிகர்ணிகா கட்டம் பற்றி மிகச் சிறப்பாக கூறியுள்ளார்.ஆகையால் இங்கு சிறுதானங்கள் செய்வது மேன்மையை தரும். அவற்றின் பலன் பல மடங்கு உயரும் என்றும் கூறுவார்கள். ஆகையால் ஏராளமான யாத்திரியர்கள் இங்கே அன்னதானம் முதல் கோதானம் வரையில் செய்வதுண்டு. கங்கையில் நீராடி காரியங்களை செய்பவர்கள் பிறர்மீது படாமல் மடியாக இருப்பதில்லை. யார் மீது யாரும் படலாம். படகோட்டி, பசுமாட்டை அழைத்து வருபவர், பண்டா யார் பட்டாலும், புனிதம் குறைவதில்லை. அனைவரும் ஒன்றே என்ற தத்துவத்தை  இங்கே நிதர்சனமாக காண்கின்றோம். காசியில் இக்காரியங்களை செய்ய வருபவர்களுக்கு உதவ பல தென்னிந்திய புரோகிதர்கள் உள்ளனர். சங்கரமடம், குமரகுருபரர் மடம், திருப்பனந்தாள் மடம் போன்றவை உள்ளன. எந்தவொரு உயிரினமும் தன்னுடைய சரீரத்தை இங்கு தியாகம் செய்தால் மோட்சம் அடைந்து சிவலோகம் செல்வதாக ஐதீகம். ஆகையால் ஏராளமான மக்கள் காசியிலே இறந்துவிட தங்கள் கடைசி காலத்தை இங்கேயே கழிக்கின்றனர்.



இப்படித்துறையில் ராமகிருஷ்ணபரமஹம்சர் ஒரு தெய்வீகக் காட்சியைக் கண்டார். "" மணிகர்ணிகா கரையில் பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. வெண்ணிற ஜடாமுடியுடன் அங்கு வந்த சிவபெருமான் தாரகமந்திரத்தை இறந்தவர்களின் காதில் ஓதினார். மறுபுறம் கருணையுடன் ஜகன்மாதாவும் உயிர்களைப் பிணித்திருக்கும் தளைகளை நீக்கி அருளினாள். பாக்கியம் பெற்ற அவ்வுயிர்கள் மோட்சகதியை அடைந்தன,'' என்று தன் அனுபவத்தைக் கூறினார்.

உடல்களை எரிப்பதனால் ஏற்பட்ட புகையால், புகைபடிந்துள்ள கட்டிடம் 


கோவிலின் முன் உள்ள இந்த இடத்தில் இருக்கும்  அக்னியை கொண்டே இங்கு எடுத்துவரப்படும் அனைத்து உடல்களும் தீ மூட்ட படுகின்றது.


இங்கு தீ விழுங்கிக்கொண்டிருக்கும் உடலின் நிலமைதான் இந்த உடலுக்குமா ?
ஆனால் இந்த உடலுக்காகத்தானே வாழ்க்கையின் அதிக காலத்தை செலவழிகிறோம்,இந்த உடலை நான் என்று நினைத்ததால் தானே போட்டி , பொறாமை ,பேராசை ,கோபம் ,காமம் போன்ற குணங்கள் தோன்றியது.இந்த குணங்களால் தானே வாழ்க்கையில் அனைத்து நிம்மதியும் இழந்து தவிக்கிறோம் என்ற எண்ணத்தில் பார்த்துக்கொண்டு உள்ளாரோ ?

இந்த உடலுக்குள் என்ன இருந்தது அன்று என்ன இல்லை இன்று.
நாம் நம் வாழ்க்கையில் அன்று இருந்த அந்த ஒன்றிற்கு முக்கியத்துவம் 
கொடுக்கின்றோமா ?
அல்லது சாம்பலாகும் இந்த உடலிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமா ?

சிவவாக்கியர் பாடல் 
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காணவல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.




திருமூலரால் எழுதப்பட்ட பாடலின் ஒரு சிறு பகுதி 
திருமந்திரம்

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.

உடம்பினை  வளர்தேன்  உயிர் வளர்த்தேனே !!!!!


கடுவெளி சித்தர் பாட்டு 

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

விளக்கம் : மனித உயிர் ( ஜீவன் ) ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப்பட்டு இருக்கிறது.இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டுகிறான். ஜீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நாலாறு மாதமாய் (4+6=10) மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான். ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன்(இறைவன்) செய்து கொடுத்தான்.தோண்டி(உடல்) கிடைத்தவுடன் ஆண்டி கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டுடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தோண்டியை(உடல்) தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.(மனிதன்).

அதுபோல் அல்லாமல்  நல்ல வழியை தேட வேண்டும் என்றும், எந்நாளும் கடவுளின் அருளை தேட வேண்டும் என்றும் வெளிப்படுத்துகிறார் கடுவெளிச் சித்தர்.

Thursday, March 14, 2013

பயணித்ததை உங்களுடன் - கங்கா ஆரத்தி

 கங்கா ஆரத்தி

“தர்ஸனாத் அப்ரஸதசி, ஜனனாத் கமலாலயே, காச்யாந்கி மரணான் 
 முக்தி,  ஸ்மரணாத் அருணாசலே ”

“கயிலையைக் கண்டால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில்  மரணமடைந்தால் முக்தி, அருணாசலத்தை நினைத்தாலே முக்தி.” என்பது இதன் பொருள்.

ஆத்திகரோ, நாத்திகரோ காசி நகரம்,  ஒவ்வொரு மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய இடம்.

கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.(கட்டம் என்றால் படித்துறை ) இத்தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடுவது மிகவும் புனிதமானதாகும்.

கங்காஆரத்தி தசாஸ்வமேத கட்டபடித்துறையில் மலை 6.30 மணிக்கு ஆரம்பிக்கிறார்கள். கங்கா ஆரத்தி ஏழு விதமாக நடத்தப்படுகிறது. புஷ்பம், ஊதுவ்ற்றி, சாம்பிராணி, தீபம், கற்பூரம், தீப தூபம், வெண்சாமரம் கொண்டு
கங்கா மாதாவிற்க்கு ஆரத்தி பூஜை நடைபெறுகிறது.

படிகளிடையே பலகையினால் நிறுவப்பட்ட சிறிய மேடையின் தங்கமாய் மின்னும் ஒரு குட்டி மண்டபம் உள்ளே முகம் மட்டும் தெரியும் கங்காமாதா அருகில் பூஜை சாதனங்கள்.  பக்கவாட்டில் பக்கத்துக்கு இரண்டாக நாலு சிறிய மேடைகள்.  அதிலும் பூஜை பொருட்கள். இரவு ஏழு மணி நெருங்குகிறது.  படிகளில் கூட்டம் வழிகிறது. மின்விளக்கு வெளிச்சத்தில் தகதகவெனப் பளபளக்கும் ஆரஞ்சு நிறப் பட்டாடையில் பூஜை மேடை அருகே கம்பீரமாக நிற்கும் இளைஞர்கள். டாணென்று ஏழுமணிக்கு அறிவிப்பைத் தொடர்ந்து நடுமேடையில் வந்தமரும் தலைமைப் பூசாரி பூஜையைத் தொடங்குகிறார்.  தீபங்கள் ஏற்றப்படுகின்றன.


இசைக் குழுவில் ஆரத்திப் பாடல் ஒலிக்கிறது. ஒவ்வொன்றாக ஏழுவிதமான தீபங்கள், படியிலிருந்து கங்கையை நோக்கி மூன்று திசைக்களுக்கும் காண்பிக்கப்படுகின்றன.  ஒவ்வொரு முறையும் ஐந்து பேரும் இசையுடன் இணைந்து துல்லியமான அசைவுகளைக்கூட ஒரு பிசிறில்லாமல் தேர்ந்த நடனக் கலைஞர்களைப் போல நேர்த்தியாக செய்யும் அந்தக் காட்சி நம்மைப் பிரமிக்கவைக்கிறது.  கனமான அந்த கொதித்துக் கொண்டிருக்கும் தீபங்களை ஒருகையில் தூக்கிச் சுழற்றிக் கொண்டே மறுகையில் கனமான மணியை அடித்துக்கொண்டே ஒரு காலில் மண்டியிட்டு நான்கு பேரும் ஒரே நேரத்தில் வினாடி பிசகாமல் திரும்புகிறார்கள்.

இறுதியில் பல அடுக்கு விளக்குகளுடன் ஆரத்தி.  உச்சஸ்தாயியில் இசைக்குழுவின் குரல்.  பக்திப் பரவசத்தில் மக்களின், ‘கங்காமாதாகீ ஜே’ என்று ஓங்கி ஒலிக்கும் குரல்களின் பின்னணியில் மூன்று முறை சுழற்றப்படும் அந்தப் பெரிய தீபம் மக்களை நோக்கிக் காட்டப்பட்டு, பிறகு அணைக்கப்படுகிறது.







thanks to Mr.Ramanan, www.tamilhindu.com
Text contents taken from above website.

Wednesday, March 13, 2013

பயணித்ததை உங்களுடன் - மகா கும்பமேளா 2013


பயணித்ததை உங்களுடன் - 1


அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 55 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்தது. இறுதி நாளான மகாசிவராத்திரியன்று மட்டும் சுமார் 30 லட்சம் பேர் புனித நீராடினர்.



 உத்தரபிரதேச மாநிலத்தில் அலகாபாத் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி என 3 நதிகளும் சங்கமிக்கிற திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறும். இந்த கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர சங்கராந்தியன்று தொடங்கியது. ஒவ்வொரு நாளும் லட்சக்கனக்கான பக்தர்களும் சாதுக்களும் புனித நீராடினர். கடந்த மாதம் 10-ந் தேதி மவுனி அமாவாசை நாளில் மட்டும் சுமார் 3 கோடிப் பேர் கும்பமேளாவில் கலந்து கொண்டனர். 

மகா சிவராத்திரி நாளில் கும்பமேளா நிறைவடைந்தது. அன்று   மட்டும் சுமார் 30 லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். 

கீழ்கண்ட புகைப்படங்கள் 09/03/2013 அன்று சுமார் 11.00 PM மணியளவில் எடுத்தவை.




 

அடுத்த பதிவு - கங்கா ஆரத்தி 

Wednesday, February 20, 2013

ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

படித்ததை உங்களுடன் - 4

ஞான ஆலயம் ஜனவரி 2013 இதழில் வெளியான சிறப்புக்கட்டுரை
தமிழில்ச.நாகராஜன்

விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க்

உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது!

ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.



ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி ( Single Photon Emission Computed Tomography ). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.


பிரான்ஸிஸ்கன் நன் களையும் திபெத்திய யோகிகளையும் தனது ஆய்வுக்கு வருமாறு ஆண்ட்ரூ அழைத்தார். மகிழ்வுடன் அவர்களும் இசைந்தனர். சுமார் 15 ஆண்டுகாலம் பென்சில்வேனியாவில் இடையறாது தன் குழுவினருடன் ஆய்வை நடத்தி வந்த ஆண்ட்ரூ மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார்.



அந்த ஆறு முக்கிய பகுதிகள் : 

1) முன் மடல் (frontal lobe) 



2) லிம்பிக் அமைப்பு (limbic system)

3)ஆன்டீரியர் சிங்குலேட் (anterior cingulate

4) அமிக்தலா (amygdale) 

5) தாலமஸ்(thalamus) 

6) சுவர் மடல்(parietal lobe)



தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

இறை நினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும்

ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இறைவனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதே மூளையில் வெவ்வேறு சர்க்யூட்டுகள் உருவாகின்றன. ஹிந்து, புத்த, யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது ஏற்படுகிறது.

அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்

பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.

1) மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!
(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)

2) கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.
(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி உடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் - நம்மாழ்வார்)

3) மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.
(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)

4) நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.
(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால் அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்; ஒரு குறையும் இலை – தாயுமானவர்)

5) சாந்தி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது. 
(தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)

கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.

இப்படி ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில் நம்பிக்கை கொண்டவர்களே அதிக நோபல் பரிசுகளை சமாதானத்திற்காகப் பெற்றதை ஆண்ட்ரூ சுட்டிக் காட்டுகிறார்.மார்ட்டின் லூதர் கிங்.,பிஷப் டெஸ்மாண்ட் டுடு. தலாய் லாமா, மதர் தெரஸா ஆகியோர் உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்கு அவர்கள் உலகின் பால் கொண்டுள்ள அதீத தயை உணர்ச்சியே ஆகும்!





நியூரோபிளாஸ்டிசிடி

நியூரான்கள் ஒரு கட்டத்தில் கற்பதை நிறுத்தி விடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள் இது வரை கருதி வந்தனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல்,” மூளை நியூரான்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.உள்ளும் புறமும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்பு செல்கள் மாறுகின்றன.இது வயதானாலும் தொடர்கிறது” என்று கூறுகிறார். இப்படிப் பல கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும் புதிய துறையின் பெயர் நியூரோபிளாஸ்டிசி.






ஆன்மீகவாதிகளுக்கு மூன்று ‘C’க்களில் அதிக திறன் ஏற்படுகிறது. Cognition. Communication creativity ஆகிய அறிவுத் திறன், தகவல் தொடர்புத் திறன், படைப்பாற்றல் திறன் மூன்றும் அபரிமிதமாக செழிக்கிறது.இறுதியாக ஆன்மாவை அறியச் செய்கிறது!

ஒழுங்கான முறையான விரதம், தியானம், பிரார்த்தனை, வழிபாடு, இதர மதச் சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு விதமான மாற்றங்களை ஏற்படுத்துவதை மூளை காண்பிக்கிறது.

ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள்

ஆகவே 
1)உலகில் நிலை பெற்றிருக்கும் கடவுள். 
2)அவரைப் பற்றிய ஆழ்மன நிலையில் நமது அறிவும் அனுபவமும், 
3)வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது கருத்தினால் முன்மடல், பக்கமடல்,சுவர் மடல் ஆகிய மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக் கொள்ளும் அமைப்பு 
ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இதற்கு பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உதவி செய்து வியக்கவைக்கும் சாந்தியை நமக்கு அளிக்கிறது.

தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது.

மூளையை மாற்றும் இறைவன்
இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain) என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!


இதன் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.
அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!!