விபாசனா தியானம் - ஓர் அறிமுகம்
நன்றி - திரு.N.கணேசன் http://enganeshan.blogspot.in/
விபாசனா, உண்மையான மன-அமைதி அடைவதற்கும், மகிழ்ச்சி நிறைந்த உபயோகமான வாழ்க்கை வாழ்வதற்குமான எளிய, செயல்பூர்வமான ஒரு வழிமுறையாகும். தன்னைத்தானே ஆராய்வதன் மூலம் மனதைத் தூய்மையடையச் செய்யும் படிப்படியான செயல்முறை இது.
விபாசனா இந்திய நாட்டின் தொன்றுதொட்ட தியான வழிமுறைகளில் ஒன்று ஆகும். விபாசனா என்ற சொல்லுக்கு 'உள்ளதை உள்ளபடி பார்த்தல்' என்று பொருள். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தர் இந்த முறையை மீண்டும் கண்டறிந்து, இதை உலகத்தின் அனைத்து பிணிகளையும் நீக்கும் அருமருந்தெனவும், இதுவே வாழும் கலை எனவும் போதித்தார்.
இந்த தியான முறை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, பிரிவையோ சார்ந்திராதது. உள்ளத்தின் மாசுகளை அறவே நீக்கி, மோட்சப் பெருநிலை அடைவதே இந்த தியான முறையின் உயரிய குறிக்கோள். உடல் நோய்களை நீக்குவதோடு நில்லாமல் மனிதர்களின் துன்பங்களை அறவே நீக்கி பூரண சுகம் அளிப்பதே இதன் நோக்கம்.
இது உடம்பிற்கும் மனதிற்கும் உள்ள ஆழமான தொடர்பை மையமாகக்கொண்டு செயல்படுகிறது. உடலையும் மனதையும் தொடர்ந்து இணைக்கக்கூடியவை உடலில் தோன்றும் உணர்ச்சிகள். உடலை உயிருள்ளதாக அறியவைப்பதும் உடலில் தோன்றும் உணர்ச்சிகள்தான். அதனால் உடல் உணர்ச்சிகளை நெறிமுறையோடு கவனிப்பதன் மூலம் உடலிற்கும் மனதிற்கும் உள்ள தொடர்பை நேரடியாக அறியமுடிகிறது. தன்னைத்தானே கவனித்து, தன்னைத்தான் ஆராய்ந்து மனதிற்கும் உடலிற்கும் உள்ள பொதுவான வேரை நோக்கி இட்டுச் செல்லும் இந்தப் பயணம் மனதின் மாசுகளைக் கரைக்கிறது. அன்பும் கருணையும் நிறைந்த மனநிலையை ஏற்படுத்துகிறது.
ஒருவரின் எண்ணங்கள், மனநிலை, உணர்ச்சிகள் மற்றும் சீர்தூக்கி ஆராயும் குணம் எவ்வாறு அறிவியற்பூர்வமான விதிகளுக்கு உட்பட்டு இயங்குகின்றன என்பது இந்த தியான பயிற்சி மூலம் தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. ஒருவர் எவ்வாறு மேம்படுகிறார் அல்லது பின்நோக்கிச் செல்கிறார், எவ்வாறு ஒருவர் துன்பங்களை ஏற்படுத்துகிறார் அல்லது துன்பங்களிலிருந்து விடுபடுகிறார் ஆகியவற்றின் இயல்பு நேரடி அனுபவத்தின் மூலம் புலனாகிறது. இந்த தியான பயிற்சி மூலம் வாழ்க்கையில் கூடுதலான பிரக்ஞை, மாயையின்மை, சுய-கட்டுப்பாடு மற்றும் அமைதி ஆகியவை வாய்க்கின்றன.
நன்றி - திரு.N.கணேசன் http://enganeshan.blogspot.in/
நன்றி - திரு.N.கணேசன் http://enganeshan.blogspot.in/
0 comments:
Post a Comment